Thursday, October 16, 2014

புத்தரின் புன்னகை



குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது.
நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி
மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.
ஓங்கி உயர்ந்த அரசமர நிழலில்
மோன நிலையில் இருக்கிறார் புத்தர்.
மயில் ஆடிக்கொண்டிருக்கிறது;
அமைதி எங்கும் விரிந்திருக்கிறது.

ஊர்க்கோடியில் வீற்றிருக்கும்
காவியுடைத் துறவியைக் காண
கூட்டம் குழுமுகிறது; நோட்டமிடுகிறது.
வணங்கிய மக்களை வணங்கி,
அமுத மொழிகளைப் பகர்கிறார் புத்தர்:

Thursday, June 26, 2014

பசுமை நிறைந்த நினைவுகள்.. பாடிப் பறந்த பறவைகள்...


நாச்சிமுத்து பாலிடெக்னிக் - பிரதான கட்டடம்

25 ஆண்டுகள் என்பது மானுட வாழ்வில் பெரும்பகுதி. அப்படிப்பட்ட 25 ஆண்டுகளைக் கடந்து, முன்னர் தன்னுடன் பயின்ற நண்பர்களைக் காண்பது ஒரு பேறு.

1986- 89-இல் பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நான் பட்டயப்படிப்பு (DME) படித்தேன். அப்போது என்னுடன் படித்த சக மாணவ நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தால் (NAPAA) வாய்த்தது.

கடந்த 15.06.2014, ஞாயிற்றுக்கிழமை, நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கத்தில் இந்தக் கூடுதல் நடைபெற்றது. அங்கு பயின்று பொன்விழா காணும் முன்னாள் மாணவர்களும் (1964 பேட்ச்) வெள்ளிவிழா காணும் முன்னாள் மாணவர்களும் (1989 பேட்ச்) அதில் சந்தித்து மலரும் நினைவுகளுடன் கட்டியணைத்துக் கொண்டோம்.

நாங்கள் படித்தபோது பாலிடெக்னிக் வளாகத்தில் மரங்கள் தான் அதிகம்;  காடுபோலக் காட்சி அளிக்கும். இப்போது எல்லா இடங்களிலும் கட்டடங்கள். டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியும் அதே வளாகத்தில் இயங்குவதால், கல்வி நிறுவன வளாகமே முற்றிலும் தோற்றம் மாறி இருந்தது.

பாலிடெக்னிக் வளாகம் மட்டுமல்ல, நாங்களும் தான். 25 ஆண்டுகள் அல்லவா? பலரும் இளமைப் பருவத்தைக் கடந்த அனுபவ நிலையை தோற்றத்தில் காட்டினோம். ஆயினும், ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு, பெயரை மறக்காமல் அழைத்து, நலம் விசாரித்து, குதூகலித்தோம்.

Tuesday, June 17, 2014

25 ஆண்டுகளுக்கு முன் இங்கு தான் நான் படித்தேன்...

.

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

.


பொள்ளாச்சி, ஜூன் 15: பொள்ளாச்சியிலுள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 1964ஆம் ஆண்டும் 1989ஆம் ஆண்டும் படிப்பு முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) மிகவும் உணர்ச்சிகரமாக நடைபெற்றது.

பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கில் காலை 10.00 மணிக்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு துவங்கியது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தின் (என்ஏபிஏஏ- நாபா) கெüரவத் தலைவர் கே.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

முன்னிலை வகித்த  ‘நாபா' தலைவர் எம்.மீனாட்சி சுந்தரம், முன்னாள் மாணவர் சங்கத்தின் சேவைப்பணிகளைப் பட்டியலிட்டார். அலும்னி சங்கத்தின் நன்கொடையால் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Thursday, December 19, 2013

சாகித்ய அகாதெமி விருதுக்கு 'கொற்கை' நாவல் தேர்வு




திருநெல்வேலி, டிச. 18: திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்த எழுத்தாளரும் தனியார் சரக்குப் போக்குவரத்து நிறுவன அதிகாரியுமான ஜோ டி குரூஸ் (51) எழுதிய 'கொற்கை' நாவல் நிகழாண்டு (2013) இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட கடலோரக் கிராமங்களில் ஒன்று உவரி. இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிக் கல்வியை திருநெல்வேலி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், உயர்கல்வியை சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ., பொருளாதாரமாகப் பயின்றவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.பிஃல். பயின்றார்.

இவர் ஏற்கெனவே 'ஆழிசூழ் உலகு' எனும் நாவலை எழுதியுள்ளார். அந்த நாவலுக்கே சாகித்ய அகாதெமி விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது, இவரது 'கொற்கை' நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

Tuesday, November 5, 2013

புட்டிகளின் உலகம்





ங்கிங்கெனாதபடி எங்கும்
பரவிக் கிடக்கின்றன புட்டிகள்.

சாக்கடைக் கால்வாய்களில்...
குப்பைமேடுகளில்...
முட்டுச்சந்துகளில்...
சாலையோரங்களில்...
இருட்டு மூலைகளில்...
எல்லா இடங்களிலும்
காணக் கிடைக்கின்றன புட்டிகள்.

கரும்பச்சை நிறப் புட்டிகள்...
தங்கநிறம் மின்னும் புட்டிகள்...
கழுத்து நீண்ட புட்டிகள்...
சப்பையான புட்டிகள்...
குடுவை வடிவிலான புட்டிகள்...
எல்லா வடிவங்களிலும்
பொறுக்கக் கிடைக்கின்றன புட்டிகள்.

Saturday, November 2, 2013

பண்டிகைகளின் ராஜா தீபாவளி!

அனைத்து மதத்தினருக்கும் ஆனந்தம் அளிக்கும்

பண்டிகைகளின் ராஜா தீபாவளி!


பண்டிகைகள் மக்களுக்கு ஆனந்தம் அளிப்பவை மட்டுமல்ல, இவை தான் மக்களை ஒரு சமுதாயமாகப் பிணைக்கின்றன. அதிலும் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் புழங்கும் இந்தியப் பெருநிலத்தில் பண்டிகைகளின் முக்கியத்துவம் சாதாரணமானதல்ல.
 

குறிப்பாக, தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவம் அளவிட முடியாதது. 'பண்டிகைகளின் ராஜா' என்று தீபாவளியைக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு பல்வேறு சமுதாயத்தினரிடமும், பல்வேறு மதத்தினரிடமும் தீபாவளியின் தாக்கம் உள்ளது.

Friday, August 30, 2013

பார்க் கல்லூரி விழாவில் பங்கேற்பு


திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை,  அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு. திருமாறன் எனது நண்பர்; விவேகானந்தம் 150 இணையதளத்தின் தொடர்ந்த வாசகர். அந்தத் தளத்தில் சென்னையைச் சார்ந்த ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார்.  அவர் திரு. திருமாறன் அவர்களுடன் ஒரே கல்லூரியில் ஒரே ஆண்டில் படித்தவர். இது,  திருப்பூரில் அறம் அறக்கட்டளையின் சுதந்திர தினவிழாவில் திரு. திருமாறன் பங்கேற்றபோது, அவரே சொல்லி நான் அறிந்தது.

இந்நிலையில், அண்மையில் இவ்விருவருடனும் இணைந்து பார்க் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு திரு. திருமாறன் அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். 

அவரது அழைப்பை ஏற்று கல்லூரியின் கணிப்பொறியியல் துறை பேரவை துவக்க விழாவில் (27.08.2013) பங்கேற்றேன். சிறப்பு விருந்தினர் ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி அவர்கள்- கணிப்பொறித் துறையில் 50-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்; காம்கேர் என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருபவர். அவர் தனது அனுபவங்களால் அத்துறை மாணவர்களுக்கு நல்ல வழி காட்டினார். அன்பான சகோதரி போல இயல்பான பேச்சு. மாணவ மாணவியருக்கு வாழ்க்கை அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் கலந்து அவர் அளித்த உரை நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய  திசைகளைக் காட்டி இருக்கும். 

Tuesday, August 20, 2013

திருப்தி அளிக்கும் நிகழ்வு



திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தினத் திருவிழாவில் இணைந்து பணி புரிந்தது மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கும் நிகழ்வாக அமைந்தது.

சுதந்திர தினத்தன்று வீட்டில் டி.வி. முன் அமர்ந்துகொண்டு சினிமா நடிகைகளின் பேட்டியைக் கண்டு ரசித்து  நேரத்தை வீணாக்காமல், சமூகத்திற்குப் பயனளிக்கும் விதமாக நாள் முழுவதும் கொண்டாட்டமாக, சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என்று திருப்பூர் அறம் அறக்கட்டளை திட்டமிட்டது. அதன் உறுப்பினர் என்ற முறையில் நானும் அதில் இணைந்து பணியாற்றினேன். அதன் தலைவர் ஆடிட்டர் திரு. சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழு உற்சாகமாகவும் ஒருங்கிணைந்தும் நடத்திக் காட்டியுள்ள இவ்விழா, பல அற்புதமான முன்னுதாரணங்களை உருவாக்கி உள்ளது.