Tuesday, September 4, 2012

எண்ணங்கள்

பண்பாட்டை விளக்கும் உன்னதத் திருவிழா


நமது நாட்டின் பண்பாட்டுச் சிறப்புக்கு அடையாளமாகத் திகழ்பவை பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகைக்கும் தோற்றக் காரணம் உண்டு. மக்களை ஒன்றிணைப்பதும், மகிழ்ச்சியூட்டுவதுமே பண்டிகைகளின் அடிப்படை நோக்கம். அந்த வகையில் கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தனிச் சிறப்பு மிக்கதாகும்.

‘பரசுராம க்ஷேத்திரம்’ என்று அழைக்கப்படும் பெருமை வாய்ந்த கேரளத்தை முன்னொரு காலத்தில் மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். இவர் பிரகலாதனின் பேரன். நல்லாட்சி நடத்தியதால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தான தர்மம் செய்வதில் நிகரற்றவராக விளங்கிய இவரது மனத்திலும் மாசு புகுந்தது. தானத்தில் தன்னை விஞ்ச ஆளில்லை என்ற ஆணவமும், தேவர்களை அடிமைப்படுத்திய அசுர குணமும் மகாபலிக்கு வினையாக அமைந்தன.

Tuesday, August 7, 2012

எண்ணங்கள்


மிரட்டும் பிளக்ஸ் விளம்பர பேனர்கள்


எந்த ஒரு நவீனக் கண்டுபிடிப்பும் அதன் பயன்பாட்டில்தான் மதிப்பு பெறுகிறது. பாறைகளை உடைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட 'டைனமைட்' இன்று உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் கொடூர ஆயுதம் ஆகியிருப்பது இதற்கு உதாரணம்.

இதேநிலையில்தான் 'பிளக்ஸ் பேனர்' எனப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அச்சிடப்படும் விளம்பரங்களும் உள்ளன என்று சொன்னால் மிகையில்லை.

டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியால் புகைப்படங்களை உள்ளது உள்ளபடி அச்சிடும் வசதி இருப்பதால், சுயவிளம்பரத்தைத் தேடிக்கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளின் எளிய சாதனமாக பிளக்ஸ் விளம்பரங்கள் மாறி இருக்கின்றன.

வர்த்தக நிறுவனங்களும் கூட நீண்ட நாள் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு பிளக்ஸ் விளம்பரங்களையே நாடுகின்றன. இதன் காரணமாக புற்றீசல்போல எங்கு பார்க்கினும் பிளக்ஸ் விளம்பரங்களே கோலோச்சுகின்றன. இவற்றின் ஆபத்து குறித்து யாருக்கும் கவலையில்லை.

Saturday, August 4, 2012

ஜெயமோகனுக்கு ஒரு கடிதமும் பதில் கடிதமும்



ஜெ. இணையதளத்தில் சங்கீதா ஸ்ரீராம் புத்தகம் குறித்துப் படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்கள் உண்மை. ஜெயமோகனின் மனைவி எடுத்த உறுதிமொழி அற்புதம். அதுதொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை குறிப்பிட விரும்புகிறேன்.

வேளாண் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே குறிக்கோளைத் தவறவிட்டுப் பன்னாட்டு உரம், பூச்சிமருந்து, விதை கம்பெனிகளின் தரகர்களாக மாறிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. கோவையிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ரூ. 4 கோடி பணம் தரப்பட்டதாக தகவல் உண்டு. இந்தப்பணம் அநேகமாகப் பன்னாட்டு நிறுவனத்தின் பணமாகத் தான் இருக்கும். இப்போது பதவியில் இருந்து விலகிய ஒரு துணைவேந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இப்போதும் இந்தக் காலியிடத்துக்கு பலத்த அடிதடி நடக்கிறது.

வேளாண் பல்கலையில் பல செய்தி சேகரிப்பு நிகழ்வுகளுக்கு ஒரு நிருபராக நான் சென்றிருக்கிறேன். அந்த நிகழ்வுகள் சில நிறுவனங்களால் ‘ஸ்பான்சர்’ செய்யப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்த நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் முகவர்கள். பலகோடி செலவில் இயங்கும் பலகலைக்கழகம் இதுபோன்ற கருத்தரங்குகளை சொந்த செலவில் செய்ய முடியாதா?

முடியும். ஆனால், பல்கலையில் உள்ள தாசர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதன் பின்விளைவாகவே, மரபணு மாற்றப்பட்ட நெல் எந்த அனுமதியும் இன்றிப் பரிசோதனை முறையில் கோவை வேளாண் பல்கலை வயலில் விளைவிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் பெரும் போராட்டம் விவசாயிகளால் நடத்தப்பட்டது.

கோவை வேளாண் பல்கலையில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட பலநூறு பயிர் ரகங்களில் இன்றும் உபயோகத்தில் உள்ளவை எவை என்று கேட்டால் அங்குள்ளவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. மொத்தத்தில் ஆராய்ச்சி என்ற பெயரில் அரசு நிதியை விழுங்கவும், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்கான விவசாயப் பட்டம் வழங்கவும், பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படவுமே வேளாண் பல்கலைக்கழகங்களால் இயலும்.

பசுமைப் புரட்சி மட்டுமல்ல, இனிவரும் எந்த விவசாய முன்னேற்ற திட்டமும் இத்தகைய முதுகெலும்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படுமானால் எந்த நற்பயனும் விளைவது சந்தேகமே.

வமுமுரளி

---------------------------------------

அன்புள்ள முரளி

நம்மாழ்வார் அடிக்கடி ஒரு நிகழ்ச்சியைச் சொல்வார்

ஒரு விருந்தில் பரிமாறப்பட்ட திராட்சைப்பழங்களை வேளாண் பல்கலைத் துணைவேந்தர் ஜெயராஜ் உண்ண மறுத்துவிட்டார். அவை ஒரு பூச்சிக்கொல்லிக்குள் ஊறப்போடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்றார். அவற்றுக்குள் பூச்சிக்கொல்லி ஊடுருவியிருக்கும், ஆஸ்துமா உருவாக்கும் என்றார்

ஏன், அந்த மருந்து தீங்கற்றது என்றுதானே பல்கலைக்கழகம் பிரச்சாரம் செய்கிறது என்று நம்மாழ்வார் கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சிரித்தாராம்

ஜெ

---------------------------------------

காண்க: ஜெயமோகன் இணையதளம்  (30.07.2012)
.

Monday, July 23, 2012

படக் கவிதை - 04















நம்பிக்கை விழுதுகள்

இந்தக் கட்டை வண்டியும்
காரில் ஏறும்
காலம் வராமலா போகும்?
இன்றைய உழைப்பின்
விழுதுகள்
நாளைய நம்பிக்கையில்
வேர்விடும் தருணம்
கட்டைவண்டியின்
கனவுகள் நிறைவேறும்.
இந்தக் கட்டைவண்டியும்
ஒருநாள்
காரில் ஏறும்.



Saturday, June 30, 2012

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு?

சந்தர்ப்பவாதம் = அரசியல் 

அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரைத் தீர்மானிப்பதற்கு முன் நடந்த அரசியல் கூத்துக்கள் அனைவருக்கும் தெரியும். பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் அறிவிப்பதற்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியும் ஓர் அரசியல் அதிரடியை நிகழ்த்தினர்.

காங்கிரஸ் கட்சி முன்வைத்த உத்தேச வேட்பாளர்களின் பெயர்களை நிராகரித்த இவ்விருவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினர். இது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே, பிரணாப் முகர்ஜியின் பெயரை காங்கிரஸ் அவசரமாக அறிவித்தது.

அதன் பிறகு நடந்ததை நாடு அறியும். மம்தாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த முலாயம் சிங், ஒரேநாள் இரவில் அந்தர்பல்டி அடித்து மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் நகைச்சுவை.

Monday, June 25, 2012

பிராந்தியக் கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரம்?

அருண் நேரு
 கூட்டணிக் குழப்பங்கள், கொள்கைத் தடுமாற்றங்கள், கிரேக்கப் பொருளாதார நெருக்கடி, பிரிட்டனில் நிலவும் தொழில் மந்தநிலை போன்ற எதிர்மறையான நிகழ்வுகளிடையே நமது பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

இந்த மோசமான நிலையிலும்கூட, நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நம்மால் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய முடிந்திருக்கிறது; விரைவில் அவர் தேர்ந்தெடுக்கப்படவும் இருக்கிறார்.

ஓர் அதிசயமான உண்மை என்னவென்றால், பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்பதுதான். எந்த ஒருவரது தகுதியையும் வாய்ப்பையும் வழக்கமான சதிக் கோட்பாடுகள் குலைத்துவிடும். இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பிரணாப் முகர்ஜி அனைவரிடமும் நம்பிக்கை ஏற்படுத்துபவராகவும், எதிர்க்கட்சிகளிடமும் நடுநிலையாகச் செயல்படுபவராகவும் ஒரு நிலையான சக்தியாக விளங்கி வந்திருக்கிறார்.

Thursday, June 21, 2012

எண்ணங்கள்

கோவை பதிவர்கள் சந்திப்பில் நான்


கோவை பதிவர்கள் குழு படத்தில் நானும்  (கண்டுபிடியுங்கள்)

கடந்த ஜூன் 10 ம் தேதி  கோவையில் (ஓரியன் ஓட்டல், கிராஸ் கட் சாலை) நடந்த 'கோவை பதிவர்கள்' சந்திப்பில் கடைசி நேரத்தில் சென்று கலந்துகொண்டேன். நண்பர்கள் சங்கவி, சம்பத், ஜீவா, சுரேஷ், கோவை சக்தி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 40 க்கு மேற்பட்ட பதிவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஒரு பதிவர் என்ற முறையில் நானும் பங்கேற்றது  மகிழ்ச்சி.

எண்ணங்கள்

இடுக்கி மாவட்ட சிபிஎம் தலைவர் மணி

'வாக்குமூலம்' ஏற்படுத்திய சிக்கல்!

''நீ சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காக்க இறுதி வரை போராடுவேன்'' என்றார், பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர். இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்துச் சுதந்திரம் இல்லாத தேசங்களில் சர்வாதிகார ஆட்சி நிலவுவதையே காண்கிறோம்.

நமது நாடு ஜனநாயக நாடு; தேர்தல்கள் மூலம் அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தும் நாடு. அதற்காக வாக்காளரிடம் பிரசாரம் செய்யவும், வாக்குச் சேகரிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படை அலகுகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் ஜனநாயகம் மீதான நம்பிக்கை பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்நிலையில், ஜனநாயக முறையில் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரமாணப் பத்திரம் அளித்து தேசிய அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் ஒருவர் கேரளத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு பலத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.