குறள் அமுதம்புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையாற் காணப் படும்

தீயில் கருகிய பயணிகளின் கதறல் காதில் விழுகிறதா?
கடந்த ஜூன் 7ம் தேதி இரவு வேலூர், காவேரிப்பாக்கம் அருகே நடந்த பயங்கர சாலைவிபத்தில், சென்னையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிவந்த தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 21 பேர் கருகி பலியாகி இருக்கின்றனர். இந்த விபத்தில் சிக்கிய அபலைகள் தப்பவே வழியின்றி கூண்டில் அடைபட்டவர்களாக எரிந்து சாம்பலாகி இருக்கின்றனர்.
மிகுந்த மனவேதனை அளிக்கும் இந்தக் கொடிய விபத்திற்கு தனியார் பேருந்து காரணமாக இருந்தாலும், விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தாத அரசுத் துறைகளுக்கும் இதில் பொறுப்புண்டு.
விபத்துக்குள்ளான தனியார் சொகுசுப்பேருந்தை வாங்கி ஒரு மாதம்தான் ஆகியிருக்கிறது. குளிர்சாதன வசதி கொண்டது என்பதால் இதன் முப்புறமும் கண்ணாடிச் சாளரங்கள் திறக்க முடியாதவையாக இருந்துள்ளன. முன்புற வாயிலும் மூடப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கிய பயணிகளால் பேருந்திலிருந்து வெளியேற முடியவில்லை. சாகும் தறுவாயில் அவர்கள் எழுப்பிய மரண ஓலத்தை நினைத்தாலே நெஞ்சம் பதைக்கிறது.
இந்த விபத்திற்குக் காரணம் பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே என்பது முதல்கட்ட விசாரணையில் தெளிவாகி இருக்கிறது. முன்செல்லும் வாகனங்களை வலதுபுறமாகவே முந்திச் செல்ல வேண்டும் என்ற சாலைவிதியை மீறி, முன்னால் சென்ற இரு லாரிகளை இடதுபுறமாக முந்த முயன்றுள்ளார், தனியார் பேருந்தின் ஓட்டுநர். அதேசமயம், முன்னால் சென்ற லாரி ஒன்றும் இடதுபுறமாகத் திரும்பவே, பேருந்து விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. பேருந்தின் டீசல் டேங்க் வெடித்ததில் சாலைவிபத்து தீவிபத்தாக மாறிவிட்டது.
பொதுவாகவே, தனியார் பேருந்துகள் எந்த சாலை விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் இயக்கப்படுவதைக் காணலாம். இவற்றை போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மரியாதையைக் கண்டால் பல சூட்சுமங்கள் புரியவரும்.
அரசுப் பேருந்துகளைவிட அதிவேகமாக இயக்கப்படுவதால் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே, செல்ல வேண்டிய இடத்தை இவை அடைந்துவிடுகின்றன. இதுவே தனியார் சொகுசுப் பேருந்துகளின் வியாபார வளர்ச்சிக்கு அடிப்படையாகவும் இருக்கிறது. சாலைகளில் வாகனங்களை இயக்க உச்சபட்ச வேகம் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அவற்றை தனியார் பேருந்துகள் மதிப்பதே இல்லை. போக்குவரத்து காவல்துறையினரும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸôரும் இந்த விதிமீறலைக் கண்டுகொள்வதும் இல்லை.
அரசுப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படுவது கட்டாயமாக உள்ளது. குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் ஓட்டுநர் நினைத்தாலும் அரசுப் பேருந்தை விரட்ட முடியாது. இது பேருந்துப் பயணிகளின் அச்சமற்ற பயணத்தை உறுதிப்படுத்துகிறது; தவிர எரிபொருள் செலவையும் குறைக்கிறது. தனியார் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படுவதில்லை.
தவிர வாகனங்களில் பொருத்தப்படும் முகப்பு விளக்குகளின் திறனுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. எதிர்வரும் வாகன ஒட்டுனர்களின் கண்களைக் கூசச் செய்யாததாக அவை இருக்க வேண்டும். இந்த விதியும் தனியார் பேருந்துகளில் அப்பட்டமாக மீறப்படுகிறது.
வாகனப் பதிவின்போதும், அவ்வப்போது செய்யப்படும் ஆய்வின்போதும் இவற்றை உறுதிப்படுத்த வேண்டியது போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கடமை. அவர்கள் கடமை தவறுவதால், தனியார் பேருந்துகளைக் கண்டாலே எமனைக் கண்டதுபோல எதிர்வரும் வாகனங்கள் விலக நேரிடுகிறது.
தனியார் பேருந்துகள் பயணிகளின் பாதுகாப்புக்கும், ஆபத்தான காலகட்டங்களில் தப்புவதற்கும் ஏற்றதாக உள்ளதையும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்தான் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்திருந்தால், வேலூர் அருகே நடந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை குறைந்திருக்கக் கூடும்.
நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சிறுபாலங்கள் இருக்கும் இடங்களில் சாலையின் அகலம் குறைவது "பாட்டில் நெக்' எனப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் அத்தகைய பாலம் இருந்ததும் விபத்துக்கு காரணமாகிவிட்டது. இத்தகைய பாலங்கள் மாநிலம் முழுவதும் பல இடங்களில் விபத்தை ஏற்படுத்தியபடியே உள்ளன. சாலைப் பாதுகாப்பு பிரசாரம் செய்யும் நெடுஞ்சாலைத் துறை, இந்த சாலைக் குறைபாட்டைக் கவனிப்பதே இல்லை.
எந்த ஒரு விபத்தும் பல படிப்பினைகளை அளிக்கவே செய்கிறது. ஏர்வாடியில் மனநலக் காப்பகத்தில் நேரிட்ட தீவிபத்தில் (2001) 27 மனநோயாளிகள் தப்ப வழியின்றி பலியானதும், கும்பகோணம் பள்ளியில் நேரிட்ட தீவிபத்தில் (2004) ஏதுமறியாத 83 மழலைகள் கருகி பலியானதும், ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் நேரிட்ட தீவிபத்தில் (2004) 57 பேர் பரிதாபமாக பலியானதும் மறக்க முடியாத நிகழ்வுகள்.
காவேரிப்பாக்கம் அருகே நடந்த தனியார் பேருந்து விபத்தும், 21 பேரை உயிரோடு எரித்துக் கொன்று துக்ககரமான சம்பவங்களில் இடம்பிடித்துவிட்டது. இந்தச் சம்பவம் அளித்துள்ள படிப்பினைகளை நாம் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோமா? கடமையாற்ற வேண்டிய அரசுத் துறைகளின் அலட்சியப்போக்கை அரசு சரிப்படுத்துமா?
.


பாஜகவுக்கு படிப்பினையான பேரவைத் தேர்தல்கள்
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், தேசிய அளவில் மக்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வை எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன. இந்நிலையில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக இத்தேர்தலில் பெற்றுள்ள தோல்வி குறித்த ஆய்வு அத்தியாவசியமானதாகும்.
அரசியலில் வெற்றி, தோல்விகள் சகஜமானதே. எனினும் தோல்விகளிலிருந்து படிப்பினை பெறும் அரசியல் கட்சியே எதிர்காலத்தில் வெற்றிகளை அறுவடை செய்ய முடியும். அண்மைய தேர்தலில் பாஜக.வின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு, அக்கட்சிக்கு மட்டுமல்லாது நாட்டின் அரசியலுக்கும் முக்கியமானதாகும்.
பல ஆண்டுகளாக போராடித்தான் பாஜக தற்போதைய நிலையை அடைந்துள்ளது. 1984ல் இரு எம்பி.க்களுடன் இருந்த அக்கட்சி, தனது கடுமையான முயற்சியால் நாட்டின் ஆளும்கட்சியாக 1998ல் உயர்ந்தது. ஆனால், தனது வெற்றியைத் தக்கவைக்கத் தெரியாததால் அக்கட்சி ஆட்சியை இழந்தது.
இப்போதும் நாட்டின் ஆறு மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது; மேலும் இரு மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பங்கு வகிக்கிறது; மூன்று மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால், பாஜக.வின் வலிமை இம்மாநிலங்களைத் தாண்டி வளரவில்லை; இதன் காரணமாகவே மத்தியில் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது.
நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் வட மாநிலங்களில் காலூன்றிய அளவுக்கு பாஜக.வால் தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் தடம் பதிக்க முடியாததே அக்கட்சியின் பலவீனமாக உள்ளது. நாடு முழுவதும் பரவலாக உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பாஜகவை இந்த அம்சத்தில் ஒப்பிடவே முடியாது.
அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் பாஜகவுக்கு உள்ள நடைமுறைச் சிக்கலே காங்கிரஸ் கட்சிக்கு ஆதாயமாக மாறி வருகிறது. அண்மைய பேரவைத் தேர்தல்களும் இதையே சுட்டிக் காட்டுகின்றன.
இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில்தான் ஐந்து மாநில பேரவைத் தேர்தலில் பாஜக களமிறங்கியது. தேர்தல் நடந்த தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் இதற்கு முன்பும் பாஜக மாபெரும் வெற்றிகளைப் பெற்றதில்லை. அசாமில் மட்டுமே இம்முறை சிறிது நம்பிக்கை அக்கட்சிக்கு இருந்தது. பிற மாநிலங்களைப் பொருத்த மட்டிலும், பாஜக தனது இருப்பை வெளிப்படுத்தவே தேர்தலைக் கருவியாகப் பயன்படுத்தியது.
தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆளும்கட்சிகளுக்கு எதிரான மனநிலை மக்களிடம் காணப்பட்டது. அதை தனக்கு சாதகமாகத் திருப்புவதற்கான ஆற்றல் இல்லாமல் பார்வையாளராக இருக்க வேண்டிய நிலையில் பாஜக இருந்தது. அதன் இந்துத்துவ ஆதரவுப் போக்கு காரணமாக தோழமை வாய்ப்புள்ள கட்சிகளும் மிரண்டு பின்வாங்கின.
அசாமில் காங்கிரஸின் எதிரிகளுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தால் அங்கு தருண் கோகோய் மீண்டும் முதல்வராகி இருக்க முடியாது. பாஜகவின் தனிப்பட்ட கொள்கைகளும், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் தலைமை இல்லாததும் அங்கு கூட்டணியின் சாத்தியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தன. அதன் விளைவாக காங்கிரஸ் தனது வெற்றியை இப்போது கொண்டாடுகிறது.
அசாமில் 23 தொகுதிகளில் பாஜக இரண்டாமிடம் பிடித்து, குறைந்த வித்யாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. அசாம் கண பரிஷத், அசாம் மாணவர் கூட்டமைப்பு கட்சிகளும் இதேநிலையை பல தொகுதிகளில் அடைந்துள்ளன. இக்கட்சிகள் இணைந்திருந்தால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும். இம்மாநிலத்தில் கூட்டணி அமையாததற்கு பாஜகவின் பிடிவாதமும் ஒரு காரணம்.
மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ந்த மக்கள் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரûஸத் தேர்ந்தெடுத்தனர். தமிழ்நாட்டில் திமுகவின் ஸ்பெக்ட்ரம் ஊழலால் வெகுண்ட மக்கள் அதற்கு மாற்றாக ஜெயலலிதாவின் அதிமுகவைத் தேர்வு செய்தனர். இந்த இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்புலத்தில் மமதா, ஜெயலலிதா ஆகியோரின் தொடர் போராட்டங்கள் உள்ளதை மறுக்க முடியாது.
பேரவைத் தேர்தலுக்கு இரு மாதங்கள் முன்னதாக புதிய அரசியல் கட்சியைத் துவங்கிய ரங்கசாமிகூட பாண்டிச்சேரியில் மகுடம் சூடி இருக்கிறார். அவரது அயராத உழைப்புக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் அது. இத்தகைய நம்பகத்தன்மையும் தலைமையும் வாய்ந்த தலைவர்கள் இம்மாநிலங்களில் அமையாதது பாஜகவின் தோல்விக்கு அடிப்படைக் காரணம் எனில் மிகையில்லை.
கேரளாவில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும்கட்சியை மாற்றுவது மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அங்கு இடதுசாரிகள்- காங்கிரஸ் என்று இரு துருவமாக உள்ள அரசியல் சூழலில் பாஜகவின் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. தவிர சிறுபான்மையினரின் ஆதிக்கம் மிகுந்த அம்மாநிலத்தில் பாஜக இன்னும் கிணற்றுத் தவளையாகவே உள்ளது; மூன்று தொகுதிகளில் மட்டும் குறைந்த வித்யாசத்தில் வெற்றியை இழந்த பாஜக, இம்மாநிலத்தில் பயணிக்க வேண்டிய தூரம் பல மடங்காக இருக்கிறது.
எந்த ஒரு கட்சியும் மக்களிடம் நம்பகத்தன்மையைப் பெற வேண்டுமானால், அதற்கான தொடர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைக் கையில் எடுத்துக்கொண்டு போராடாமல் எந்தக் கட்சியும் முன்னேற முடியாது. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்களின் தலைமைகளே சான்று. குஜராத்தும் கர்நாடகாவும், மத்தியபிரதேசமும் பாஜக வசமாக, அம்மாநிலங்களில் அக்கட்சி நடத்திய மக்கள்நலப் போராட்டங்களே காரணம்.
அந்த வெற்றிகளை உதாரணமாகக் காட்டி, பிற மாநிலங்களில் வெற்றியை ஈட்ட முடியாது. தேசிய அளவிலான கொள்கைகளை முழங்குவதால் பிராந்திய வேறுபாடுகள் மிகுந்த நமது நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள பிரத்யேகத் தேவைகளை அனுசரித்து அதற்கேற்ற அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, பாஜக.வால் தனது தளத்தை விரிவுபடுத்த இயலும். அப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு சரியான மாற்றாக பாஜக.வால் உயர முடியும்.
இல்லாவிட்டால், "மதவாதக் கட்சி' என்ற ஒற்றைக் குற்றச்சாட்டாலேயே பாஜக.வை புறந்தள்ளும் சாதுரியத்துடன், தொடர் தவறுகளை செய்தபடியே காங்கிரஸ் ஆட்சியில் தொடரும். இந்நிலை நாட்டிற்கு நல்லதல்ல.
ஐந்து மாநிலங்களில் பெற்றுள்ள வாக்குகள், தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியதும், தன்னைத் திருத்திக் கொள்வதும் பாஜக.வின் கடமை. தேசிய அளவில் இடதுசாரிகளின் செல்வாக்கு குறைந்துவரும் நிலையில், பாஜக தன்னைப் புதுப்பித்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் தொடர் தவறுகளால் திணறும் காங்கிரûஸ மிரட்டவோ, வழிப்படுத்தவோ பாஜக.வால் முடியும். .

அன்புள்ள ஜெ.மோ,
வணக்கம்.
ஈழத் தமிழர்கள் குறித்த கவலை (ஈழப்படுகொலைகள்,காலச்சுவடு) இந்தியத் தமிழர்களுக்கு இல்லாமல் போனதற்கு நீங்கள் யூகித்துள்ள காரணம் சரியே. தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைவாதிகளும், போலிப் பகுத்தறிவு பேசும் நாத்திகவாதிகளும், இந்தியா ஒரே நாடு என்பதை மறுத்துக்கொண்டே இருக்கும் குறுகிய கண்ணோட்டமுள்ள கும்பல்களும் ஈழத் தமிழர்களுக்குஆதரவான நிலைப்பாடு எடுக்கத் துவங்கியபோதே ஈழத் தமிழர் பிரச்னையிலிருந்து வெகுவான இந்தியத் தமிழர்கள் விலகஆரம்பித்தார்கள்.
ஈழத் தமிழருக்காக வீராவேசமாக முழங்கிய பெருஞ்சித்திரனார், பழ.நெடுமாறன், கு.ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி (கவனிக்கவும்: இப்பட்டியலில் வீரமணியாரை சேர்க்கவில்லை) போன்றவர்கள் மட்டுமல்லாது ‘காலச்சுவடு‘ போன்றபத்திரிகைகளும் இதே தவறைச் செய்தன. இவர்களது இந்திய எதிர்ப்பு உணர்வு, பிராமண எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து மாறிஇந்து எதிர்ப்பு உணர்வாகவும் வடிவம் பெற்றது. அதன் விளைவாக, இந்து என்ற அடிப்படையில் இந்தியாவிலிருந்துகிடைத்திருக்க வேண்டிய பிற மாநிலத்தவர்களின் ஆதரவையும் ஈழத் தமிழர்கள் இழந்தார்கள்.
ஈழத் தமிழருக்காக முழங்கிய கருணாநிதி, வைகோ, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் நாடக நடிகர்கள் என்பதை 20 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் கண்டுகொண்டுவிட்டது. அதன் விளைவாக ஏற்பட்ட அதிருப்தியும் இலங்கை வாழ் ஈழத்தமிழரையே பாதித்தது. போதாக்குறைக்கு ராஜீவ் படுகொலை (1991) தமிழக மக்களை முற்றிலும் ஈழத் தமிழர்களிடமிருந்துஅந்நியப்படுத்தியது. அப்போதும் ராஜீவ் படுகொலையை சில ஆசாமிகள் நியாயப்படுத்திப் பேசி, ஈழத் தமிழரின் வேரில் வெந்நீர்ஊற்றினார்கள்.
நான் தனிப்பட்ட முறையில் இது குறித்து பழ.நெடுமாறன், மா.நன்னன் போன்றோரிடம் விவாதித்திருக்கிறேன். அப்போது ஈழத்தமிழரின் வாழ்க்கை மேம்பாட்டை விட அவர்கள் முக்கியமானதாகக் கருதியது, இந்திய ஒற்றுமை, இந்து மத உணர்வுக்குஎதிரான நிலைப்பாடு தான். நெடுமாறன் அவர்களிடம், ”ஈழத் தமிழர்கள் இந்துக்கள் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்தஇந்தியாவிலும் நீங்கள் ஆதரவை திரட்டலாமே?” என்று நான் (2000) கூறினேன். அப்போது, ‘’இந்து மதம் என்ற ஒன்றேஇல்லாதபோது அந்த கேள்வியே எழவில்லை’’ என்றார். நிதர்சனத்தை கண்மூடித்தனமாக எதிர்க்கும் இத்தகையவர்களிடம் ஆலோசனை பெற்ற பிரபாகரன் தவறான முடிவு எடுத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
இலங்கை இனப்பிரச்னையில் மொழிப் பாகுபாடு மட்டுமல்லாது மதப் பாகுபாடும் பெரும் பங்கு (புத்தமத ஆதிக்கம்- இந்து மதபாதிப்பு) வகித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ஈழத் தமிழருக்கு ஆதரவான அமைப்புகள் அனைத்தும் பகுத்தறிவு, நாத்திகவாதம், இந்து எதிர்ப்பு சிந்தனைகளில் ஊறியவையாக இருந்ததால், இந்து என்ற அடிப்படையிலான ஆதரவு இலங்கை வாழ் தமிழருக்குதடுக்கப்பட்டுவிட்டது. பெரும் தமிழறிஞர்கள் பலர் இந்த விவாதக் களத்திலிருந்து ஒதுங்கவும் இதுவே காரணமானது. ஈழத்திலும்தமிழகத்திலும் கலாச்சார வேர்களை மத அடிப்படையில் ஒன்றாகவே கொண்டிருந்தும், வாரியார், அ.ச.ஞானசம்பந்தம், தெ.ஞானசுந்தரம் போன்ற பெரியவர்கள் அமைதி காக்கவும் இதுவே காரணம்.
1984 ல் மதுரையில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டில் பாஜக தலைவர் வாஜ்பாய் பேசி இருக்கிறார். ஆனால், வாஜ்பாய்ஆட்சியில் ஈழத் தமிழருக்கு நலம் விளையும் செயல்கள் மேற்கொள்ளப்படவில்லை; அதற்கான தூண்டுதலை அளிக்கதமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவு அமைப்புகளால் இயலவில்லை. இதற்கும் காரணம், இரு தரப்பிலும் நிலவிய சந்தேகமனப்பான்மை தான். எனினும் காங்கிரஸ் கட்சியை விட பாஜக மீது இலங்கை அரசுக்கு சிறிது பயம் இருந்தது; 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக போரின் இறுதிக் கட்டத்தை இலங்கை ராணுவம் நிறுத்தி வைத்ததற்கு காரணம்இருந்தது.
இப்போதும்கூட, சீமான் மட்டுமே ஈழத் தமிழருக்காக பல அடக்குமுறைகளை மீறி பேசி வருகிறார். அவரும் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு முலாமுடன் தான் இயங்குகிறார். இவ்வாறாக, தவறான நபர்களிடம் சிக்கிக்கொண்ட மேடையாக ஈழத் தமிழரின்வாழ்க்கைக்கான போராட்டங்கள் மாறிவிட்டன. ஈழத்தமிழர் நல வாழ்வு என்பது தனி ஈழமாகவும் அதன் தொடர்ச்சிதனித்தமிழ்நாடு என்றும், எந்த விவேகமும் இன்றி பிதற்றிய அமைப்புகளே ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு வித்திட்டனர். இன்றுபுலம்பும் ‘காலச்சுவடு‘ இதழும் இந்த திசையில் ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்ததே. இதைச் சொன்னால், மதவாத முத்திரையுடன் பிற்போக்குவாதி பட்டமும் கிடைக்கும் என்பதால் பலரும் சொல்லத் தயங்குகின்றனர்.
மொத்தத்தில் ஈழத்தமிழருக்கான பாதுகாப்புக் கேடயமாக இருந்திருக்க வேண்டிய வாய்ப்பை தமிழகம் உதறிவிட்டது. இந்தியஎதிர்ப்பாளர்கள் வசமிருந்த களத்தை தனதாக்கும் விவேகமும் வேகமும் இல்லாமல் வேடிக்கை பார்த்த தேசிய உணர்வுள்ளதமிழர்களுக்கும் இதில் பங்குண்டு. இப்போதும் நம்மை நம்பிக் காத்திருக்கும் அப்பாவி ஈழத் தமிழருக்காக சுய அகந்தையைவிட்டுக்கொடுக்க யாரும் தயாரில்லை என்பதையே ‘காலச்சுவடு’ கருத்தரங்கிலிருந்து கழன்றுகொண்ட அறிவுஜீவிகள் காட்டிஇருக்கின்றனர்.
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் எதிரான போரில் வேடிக்கை பார்ப்பவர்களும் அதர்மத்திற்கு துணை போவதாகவே பொருள்என்பது நமது நாட்டின் தத்துவம். இலங்கைவாழ் தமிழர்கள் தொடர்பான போரில் மட்டுமல்லாது விவாதத்திலும் கூட தமிழகம்நீதியுடன் செயல்படாமலே உள்ளது. தமிழன் என்று சொல்லவே அவமானப்பட வேண்டிய தருணம் இது.
-வ.மு.முரளி
08.05.2011
--------------------------------------------------------------------
குறிப்பு: எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதிய கட்டுரை தொடர்பான விவாதத்தில் இடம் பெற்ற எனது கருத்து இது.
.