Saturday, October 22, 2011

எண்ணங்கள்

சுவாமி நிகமானந்தா

உயிர்ப்புடன் விளங்கும்
பாரதத்தின் மகத்தான ஆயுதம்

பாரத நாட்டுக்கே உரித்தான உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் ஒருமுறை வென்றிருக்கிறது. கூடங்குளத்தில் அணு மின்நிலையத்துக்கு எதிராக ஆயிரக் கணக்கானோர் இருந்த தொடர் உண்ணாவிரதம், கேளாச் செவிகளுடன் இருந்த மத்திய, மாநில அரசுகளை கீழிறங்கிவரச் செய்திருக்கிறது. அறவழிப் போராட்டத்தின் சிறப்பு மீண்டும் உலக அரங்கில் பதிவாகி இருக்கிறது.
  .
உண்ணாவிரதம் என்பது பாரதத்தில் தொன்றுதொட்ட வாழ்க்கைமுறையாகவே இருந்துள்ளது. குடும்ப நலனுக்காகவும் கணவர் நலனுக்காகவும் விரதம் இருப்பது இந்தியப் பெண்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு.

அஹிம்சையை போதிக்கும் பாரதத்தில் தோன்றிய மதங்களான பெüத்தமும் சமணமும் உண்ணாநோன்பை வலியுறுத்துவன. அந்தப் பாரம்பரியத்தில் வந்ததால்தான், மகாத்மா காந்தியால் ஆங்கிலேயருக்கு எதிரான வலிமையான ஆயுதமாக உண்ணாவிரதத்தை மாற்ற முடிந்தது.

தன்னல மறுப்பே உண்ணாவிரதத்தின் அடிப்படை. உயிர் வாழ இன்றியமையாத உணவையும்கூட மறுப்பதென்பது மனவலிமையின் அடையாளம். பிறர் நலனுக்காகவோ, ஒரு பொதுநோக்கத்துக்காகவோ உண்ணாவிரதம் இருக்கும்போது, அது மகத்தான வழிமுறை ஆகிறது.

இந்த வழிமுறையால்தான், நெல்லிக்காய் மூட்டையாகச் சிதறிக் கிடந்த விடுதலைப் போராளிகளை ஒரே இலக்குடன் ஒருங்கிணைத்தார் மகாத்மா காந்தி; நாடும் விடுதலை அடைந்தது.

இன்று உலக நாடுகள் பலவற்றில் அஹிம்சைப் போராட்டம் அரசியல் ஆயுதமாக மாறி வருகிறது. கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்கள்நலனுக்கு ஊறு விளைவிக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை ஆயுதமின்றியும் வன்முறையுமின்றியும் போராடச் செய்ய முடியும் என்பதற்கு தென்ஆப்பிரிக்கா, டுனீசியா, எகிப்து நாடுகள் சாட்சியமாகி இருக்கின்றன.

ஆயினும், அஹிம்சைப் போராட்டத்துக்கு உடனடி பலனை எதிர்பார்க்க முடிவதில்லை. செருக்கு மிகுந்த ஆட்சியாளர்களுக்கு இப்போராட்டங்கள் உடனடியாகப் புரிவதில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் சில சமயங்களில் வீணாவதும் உண்டு. ஆயினும், அந்தப் போராட்டம் களத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் தொடர்ந்து ரீங்காரமிடும்.

சுதந்திர இந்தியாவில், மகாத்மாவின் வழிமுறையில் பலர் இதுவரை உண்ணாவிரதப் போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் தனி ஆந்திர மாநிலத்துக்காகக் குரல் கொடுத்த பொட்டி ஸ்ரீராமுலு. தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி மாநிலம் அமைக்கக் கோரி 1952ல் 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னை மாய்த்துக் கொண்ட ஸ்ரீராமுலுவால்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின.

அவரது அடியொற்றி 2009ல் தனி தெலுங்கானாவுக்காக 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அரசால் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். தெலுங்கானா கோரிக்கை இன்னும் நிறைவேறாவிட்டாலும், கொள்கை அடிப்படையில் அது ஏற்கப்பட்டு விட்டது.

உண்ணாவிரதம் குறித்த நினைவுகள் எழும்போது தமிழீழப் போராளி திலீபனின் தியாகத்தை மறக்க முடியாது. இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை தனது இலக்கை மாற்றிப் பயணப்பட்டபோது அதை எதிர்த்து இலங்கையில் 1987ம் ஆண்டு 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார் திலீபன். அவரது கோரிக்கை அன்று ஏற்கப்படாததன் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம்.

உண்ணாவிரதம் உயிர்த்தியாகத்துடன் முடிவடைவதற்கு, கடந்த ஜூனில் உயிர்நீத்த சுவாமி நிகமானந்தா மற்றோர் உதாரணம். கங்கை மாசுபடுவதற்கு எதிராக தனியொருவராகப் போராடிய நிகமானந்தா உத்தரகாண்ட் மாநிலத்தில் 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மடிந்தார். நதிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அவரது தியாக மரணம் உருவாக்கி இருக்கிறது.

நமது அரசியல் தலைவர்களாலும் உண்ணாவிரப் போராட்டம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2006ல், மேற்கு வங்க மாநிலம், சிங்குரில் டாடா கார்த் தொழிற்சாலைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 22 நாட்கள் இருந்த உண்ணாவிரதம், தொழிற்சாலையை இடம் மாற்றியதுடன் 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பியது.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமை காக்க அதிமுக தலைவி ஜெயலலிதா 1991ல் முதல்வராக இருந்தபோது 4 நாட்கள் இருந்த உண்ணாவிரதம் அப்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் கருணாநிதியும் பலமுறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஆனால், 2009ல் முதல்வராக இருந்தபோது அவர் நடத்திய உண்ணாவிரத நாடகம் இலங்கைத் தமிழரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தலையிடக் கோரியும், இலங்கை ராணுவத்தின் போரை நிறுத்தக் கோரியுமó ஒருநாள் காலை 7 மணிக்குத் துவங்கி 9 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து புரட்சி செய்த கருணாநிதியால் உண்ணாவிரதம் கேலிப்பொருளானது. உண்ணாவிரதத்துக்கு எதிரான உண்ணும் விரதம் என்ற கிறுக்குத்தனமான முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் தமிழகத்துக்கு உண்டு.

மணிப்பூரில் பாதுகாப்புப் படை சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 2000த்திலிருந்து 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஐரோம் ஷர்மிளா, கறுப்புப் பணத்துக்கு எதிராக சென்ற ஜூன் மாதம் 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ், ஜன லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி சென்ற மாதம் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஆகியோரும் உண்ணாவிரதத்தின் பெருமையை உயர்த்தியவர்கள்.

நர்மதை அணைத் திட்டத்துக்கு எதிராக 2006ல் 20 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூகப் போராளி மேதா பட்கர் அப்போராட்டத்தில் வெல்லாத போதும், மும்பை குடிசைவாசிகளுக்கு ஆதரவாக 2011ல் 9 நாட்கள் இருந்த உண்ணாவிரதம் வெற்றி பெற்றது. இதிலிருந்து போராட்டத்தின் நோக்கமும் முழு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டியதன் தேவை தெரிகிறது.

இந்த உண்ணாவிரதக் களத்தில் அண்மையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் குதித்தார். சமூக நல்லிணக்கத்துக்கான அவரது மூன்று நாள் உண்ணாவிரதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக சேவகர்களும் அரசியல்வாதிகளும் போராளிகளும் விரும்பும் ஆயுதமான உண்ணாவிரதம், இப்போது கூடங்குளத்தில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. பொதுநலனுக்காக தன்னை வருத்திக்கொண்டு பாடுபடும் எவரும் மானிட குலத்துக்கு நலன் விளைவிப்பவர்களே.

பாரதத்தின் மகத்தான ஆயுதம் மீண்டும் புத்துணர்வு பெற்றிருக்கிறது. இந்த வெற்றி, ஆயுதம் ஏந்திப் போராடும் குழுக்களின் மனங்களிலும் மாற்றம் நிகழ்த்தட்டும்!

 - தினமணி (தலையங்கப் பக்க துணைக் கட்டுரை) - 22.10.2011
 .

Wednesday, September 28, 2011

புதுக்கவிதை - 144


அபத்தம்


மூக்கு முட்ட சாப்பிடும்
தொழிலாளர்நல ஆய்வாளர்.

ஏக்கத்துடன் இலைஎடுக்கும்
குழந்தைத் தொழிலாளி.

.

Saturday, September 17, 2011

எண்ணங்கள்


மரத்துப் போய்விட்டனவா நமது வெட்க நரம்புகள்?



மனித உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் நரம்புகள் நம்மிடையே மரத்து வருகின்றனவோ என்ற சந்தேகம், அண்மையில் ஒரு பேருந்துப் பயணத்தின்போது எழுந்தது. இதற்குக் காரணம், அந்தப் பேருந்தில் ஒளிபரப்பப்பட்ட ஒரு திரைப்படக் காட்சி.

பேருந்து நிறைய பயணிகள் கூட்டம். பணிகளுக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள், கல்வி பயிலச் செல்லும் மாணவ மாணவிகள், குழந்தைகள், முதியவர்கள் என மக்கள் கூட்டம் பேருந்தில் அடைந்திருந்தது. நிற்கவே இடமற்ற அந்தப் பேருந்தில்தான் ஒளிபரப்பானது கற்பழிப்புக் காட்சி.

ஒரு பெண்ணை நான்கு முரடர்கள் பலவந்தப்படுத்தும் காட்சி. பேருந்தில் அனைவருக்கும் உச்சஸ்தாயியில் கேட்கிறது அந்தப் பெண்ணின் கதறல். முந்தைய காலங்களில் இத்தகைய நிகழ்வுகளை நாசூக்கான காட்சியமைக்கில் வக்கிரமின்றி சுருக்கமாக முடித்துக் கொள்வார்கள். இந்தப் படத்திலோ, யதார்த்தம் என்ற பெயரில் பல நிமிடங்களுக்கு இந்த வல்லுறவுக் காட்சி நீண்டது.

பேருந்தில் பயணித்த பெண்கள் நெளிந்தார்கள். ஆண்களும் கூட இதைக் காண சகிக்காமல் தத்தளித்தார்கள். ஆயினும் சில இளைஞர்கள் எந்தக் கூச்சமும் இன்றி இக்காட்சியை ரசித்தபடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். பேருந்தின் நடத்துநரோ இவை எதையும் கண்டுகொள்பவராக இல்லை.

இதை எதிர்த்துக் கேட்கவும் திராணியின்றி, கேட்டால் யாரேனும் தவறாகக் கருதி விடுவார்களோ என்ற அச்சத்தில் பலர் வேடிக்கை பார்க்க, ஒரேயொரு மூதாட்டி திடீரென கர்ஜித்தார்.

"பொம்பளைங்க இந்த பஸ்சில் வர்றதா, வேண்டாமா? இங்கு யாருக்குமே புத்தி இல்லையா?' என்ற அவரது ஆவேசம், அடுத்த சில நிமிடங்களில் பேருந்தில் ஒளிபரப்பான திரைப்படக் காட்சியை நிறுத்தியது.

சுமார் 80 பேர் பயணித்த பேருந்தில் ஒரேயொரு பயணிக்குத் தான் அந்தத் தார்மிக ஆவேசம் வந்திருந்தது. ஏன் பிறருக்கு அந்த நியாயமான கோபம் வரவில்லை? சிந்தித்துப் பார்த்தால் நமது கலாச்சார வீழ்ச்சியின் அபாயம் புரிகிறது.

வெட்கம், நாணம், கூச்சம் போன்றவை ஆறறிவு படைத்த மனிதருக்கே உரித்தானவை. பிற உயிரினங்கள் இவற்றை வெளிப்படுத்துவதில்லை. மனிதரின் பண்பாட்டுயர்வு தீய செயல்களுக்கு நாணுவதில் தான் வெளிப்படுகிறது.

அதேபோல, இருட்டில் நடக்க வேண்டிய இல்லற நிகழ்வுகளை பொது இடங்களில் வெளிப்படுத்தத் தயங்கும் கூச்சமும் வெட்கமும், மனிதரின் உன்னத நிலையாக விளங்கி வந்திருக்கின்றன. இவைதான் அண்மைக்காலமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படங்கள் தணிக்கைத்துறையின் கண்டிப்புக்கு அஞ்சி பல காட்சிகளை வெட்டியதுண்டு. இன்றோ, வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய திரைப்படங்கள் கூட "யு-ஏ' சான்றிதழ்களுடன் வெளியிடப்படுகின்றன. அது எப்படி இருவித பிராயத்தினருக்கும் ஏற்றதாக ஒரு படம் சான்றிதழ் பெற முடியும்? இதைத் தட்டிக் கேட்க, வெட்க நரம்புகள் வேலை செய்யும் ஒருவர்கூட திரைப்படத் தணிக்கைத் துறையில் இல்லை.

வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய "ஏ' சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை இரவு 11.00 மணிக்கு மேல் தான் தொலைக்காட்சிகளில் திரையிட முடியும். ஆனால், இந்த "யு-ஏ' சான்றிதழ்க் கோளாறு காரணமாக, இத்தகைய பாலியல், வன்முறை கலந்த படங்கள் பகல் நேரத்திலேயே நமது வீடுகளில் வலம் வருகின்றன.

இத்தகைய அனுபவமே, பேருந்தில் நிகழ்ந்த அத்துமீறலை பலரும் பொறுத்துக் கொண்டதற்கான காரணம் என்று தோன்றுகிறது. இரவுநேர சல்லாபங்களின் விரக தாபங்களையும், உணர்ச்சியோலங்களையும் பாடல்களில் புகுத்தும் நமது இசையமைப்பாளர்களைக் கண்டிக்காமல், திரையிசைப் பாடல்களை நாம் கூச்சமின்றிக் கேட்டு மகிழவும் இதுவே காரணம்.

பொது உபயோகத்துக்கான பேருந்துகளில் ஒளிபரப்பு சாதனங்களின் பயன்பாட்டுக்கு வரையறை உள்ளது. இத்தகைய உண்ர்ச்சிகளைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்புவது, விபத்துக்கும் குற்றங்களுக்கும் வழிவகுக்கலாம். ஆனால் இதை ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளிடமும், வெட்க நரம்புகள் வேலை செய்வதில்லை.

சமுதாயத்தில் பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகரிக்க, நாணமற்ற தன்மையே காரணமாக உள்ளது என்கின்றனர் மனோவியல் வல்லுநர்கள். உண்மையில் நாணமும் வெட்கமும் நம்மைக் காக்கும் கவசங்கள்; அவை நம்மை பிற்போக்குத்தனத்தில் தள்ளுபவை அல்ல. ஆனால், நமது வெகுஜன ஊடகங்களும் கருத்துருவாக்கும் முற்போக்கு அறிவுஜீவிகளும் கட்டற்ற நுகர்வு கலாசாரமே சிறந்தது என்று கருதுகிறார்கள். அதையே சாமானியரும் தொடர்கிறார்கள்.

மொத்தத்தில், இங்கு யாருக்கும் வெட்கமில்லை. நமது கலாச்சாரம் வீழ்ச்சியுற்றாலும், சொந்த சகோதரர்கள் துயரத்தில் மாய்ந்தாலும், ஊழல் வெள்ளம் தலைக்கு மேல் பாய்ந்தாலும், யாருக்கும் கவலையில்லை.

ஆபாசச் சுவரொட்டிகளை எந்தத் துணுக்குறலும் இன்றிக் கடக்கும் மனநிலையே எங்கும் தொடர்கிறது. தார்மீக ஆவேசத்துக்கும், வெட்க நரமóபுகளுக்கும் உள்ள தொடர்பு தெளிவாகவே தெரிகிறது.

நமது பண்டைய இலக்கியங்கள் அகம்- புறம் என்றும், களவு- கற்பு என்றும் பாகுபடுத்திய மனித வாழ்க்கையின் சிறப்பு, கலாச்சாரச் சீரழிவால் காணாமல் போகிறது. இனியும் நமது வெட்க நரம்புகள் வேலை செய்யாவிட்டால், சமுதாயமே நரம்புத் தளர்ச்சியால் நலிந்துபோகும் வாய்ப்பிருக்கிறது.

நன்றி: தினமணி  (09.09.2011)

Friday, September 9, 2011

எண்ணங்கள்

வாழ்வை இனிதே ருசிக்க
கொண்டாடுவோம் திருவோணம்!



(மகாபலிபுரம் சிற்பக்காட்சி)

நமது பண்பாடு மிகப் பழமையானது. அதிலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் என தனித்த குணாசிசயங்களுடன் கூடிய பண்டிகைகள் உள்ளன. தமிழகத்தில் பொங்கல் திருவிழா, கர்நாடகாவில் தசரா, ஆந்திராவில் யுகாதி, பஞ்சாபில் பைசாகி திருவிழா, வங்கத்தில் துர்க்கா பூஜை, மகாராஷ்டிராவில் கணேச சதுர்த்தி, வடமாநிலங்களில் ஹோலி, காஷ்மீரில் ஜிரி மேளா... என பண்டிகைகள் பலவிதம். இவை அனைத்தின் நோக்கம், மக்களைப் பிணைப்பதும், வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்துவதுமே.

அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, அலாதியான சிறப்புகளுடன் மலையாள மக்களை மகிழ்விக்கிறது.

தன்னகந்தையால் அழிந்த மகாபலி மன்னனுக்கு திருமால் அளித்த வரத்தின் பயனாக, ஆண்டுக்கு ஒருமுறை தனது நாட்டு மக்களின் நலத்தை அறிய மகாபலி சக்கரவர்த்தியே பாதாளத்திலிருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்க கேரளம் முழுவதும் வண்ணக்கோலமாக மாறும் அழகே அழகு.

சிவன் கோவிலில் அணையும் நிலையிலிருந்த விளக்கின் திரியைத் தூண்டி எரியச் செய்த எலிக்கு புண்ணியம் கிடைத்தது. அது அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறப்பெடுத்தது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த எண்ணமே, ஆலயப் பணிகளில் மக்களை ஊக்கமுடன் ஈடுபடுத்துவதாக உள்ளது.

நல்லாட்சிக்கு இலக்கணமாக நாட்டை ஆண்டுவந்த மகாபலி, தானத்தில் சிறந்தவராகவும் விளங்கினார். நாடி வந்தவர்களுக்கு இல்லையென மறுக்காமல் தானம் செய்வதே மகாபலியின் இயல்பு. இவரால் போரில் வெல்லப்பட்ட தேவர்கள் திருமாலைச் சரணடையவே, வாமன அவதாரம் எடுத்து மகாபலியை சம்ஹாரம் செய்தார் என்று பாகவதம் கூறும். எத்தகைய வீரனும் அகந்தையால் அழிவான் என்பதையும் மகாபலியின் வாழ்க்கை நமக்கு காட்டுகிறது.

எனினும், தனது தான தர்மத்தின் வலிமையால் இறைவனிடம் அவர் பெற்ற வரமே, அற்புதமான ஓணம் பண்டிகையை நாம் கொண்டாட வழிவகுத்திருக்கிறது. மூன்றடி நிலம் கேட்ட குறுமுனியின் தந்திரத்தை அறிந்தும், வாக்குத் தவறா வாய்மையின் இலக்கணமாக, தாரை வார்த்தார் மகாபலி. வாமனன் திரிவிக்கிரமனாக வளர்ந்து வானையும் பூமியையும் அளந்து நின்றபோது, தனது தலையையே மூன்றாம் அடிக்குக் கொடுத்து, மலையாள நாயகன் ஆனார்.

அன்று அவர் இறைவனிடம் கேட்ட வரமும் கூட மக்கள்நலம் சார்ந்ததாகவே இருப்பது, இன்றைய ஆட்சியாளர்களுக்கான பாடம். தனது மக்கள் நலமாக இருக்கிறார்களா என்று காண வரும் மன்னனை மகிழ்விக்க விழா கொண்டாடி தாமும் மகிழ்கிறார்கள் மக்கள். மக்கள் நலனை விரும்பும் மன்னன்! மன்னன் சந்தோஷமாகத் திரும்ப வேண்டும் என்று விரும்பும் மக்கள்!

ஓணம் திருவிழாவுக்கே உரித்தான ஓணம் சத்ய விருந்து, அத்தப் பூக்களம், ஓணக்களி, வள்ளம்களி ஆகியவை கேரளத்தின் சிறப்பைப் பறைசாற்றுகின்றன. இந்நிகழ்வுகளில் களிக்கும் தம் மக்களைக் கண்டு மகிழ்ந்து ஆசி அளித்து பாதாளம் திரும்புகிறார் மகாபலி.

இந்த விழாவின் இனிய நினைவுகளுடன் அடுத்த ஆண்டு வரை உழைப்பதற்கான உற்சாக ஊற்று எங்கும் பரவுகிறது. நமது முன்னோர் வாழத் தெரிந்தவர்கள். வாழ்வை இனிமையாக்கத் தெரிந்தவர்கள். அவர்கள் வழியில் நாமும் கொண்டாடுவோமா திருவோணம்?

நன்றி: தினமணி - கோவை (ஓண நிலாவு- விளம்பரச் சிறப்பிதழ்- 08.09.2011 )

Thursday, September 1, 2011

எண்ணங்கள்


 

பாரதம் எழுதிய 
முதல்வோன்

நமது நாட்டில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்கு பல முதன்மைகள் உண்டு. மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை மகரிஷி வியாசர் சொல்லச் சொல்ல எழுதிய முதல் எழுத்தாளர் இவரே. பல லட்சம் சுலோகங்கள் கொண்ட மகாபாரதம், விநாயகரின் உடைந்த தந்தத்தால் எழுதப்பட்டது என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை.

எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் விநாயகப் பெருமானை வணங்கித் துவக்குவது நமது மரபு. திரிபுர அரக்கர்கள் மீது போர் தொடுத்த ஈசன், விநாயகரை மறந்ததால் அவரது தேரச்சு முறிந்த கதையை விநாயக புராணம் கூறுகிறது. இன்றும் "பிள்ளையார் சுழி'யுடன் கணக்குப் பதிவேடுகள் துவங்குவதைக் காண்கிறோம்.

இந்து மதத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டிலும் வழிபடப்படும் பிரிய தெய்வமாகவும் விநாயகர் விளங்குகிறார். சைவக் கோவில்களில் கணபதியாக வீற்றிருக்கும் விநாயகர், வைணவக் கோவில்களில் தும்பிக்கை ஆழ்வாராக அருள்பாலிக்கிறார். தனது வாஞ்சையான தரிசனம் மூலமாக, இருமதப் பிரிவினரையும் அரவணைப்பது கணநாதரின் சிறப்பு. 

விநாயகரின் திருவிளையாடல்கள் குறித்த கதைகள், அவர்மீதான அபிமானத்தால் எழுந்தவை. தமிழ்க்கடவுள் குமரனின் அண்ணனாகவும், சிவ- சக்தி மைந்தனாகவும், மால் மருகனாகவும் கருதப்படுவதால்தான் சமய ஒருமைப்பாட்டை இவரால் எளிதாகக் கொண்டுவர முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அறுசமய வழிபாடாக ஆதிசங்கரரால் வழிபாட்டு முறைகள் தொகுக்கப்பட்டபோது, "கணாபத்யம்' என்ற முறையை அதில் இணைத்தார். இதிலிருந்து, இவ்வழிபாட்டு முறையின் பழமை தெரிய வருகிறது. கணபதியை முதற்கடவுளாக வழிபடுவதே கணாபத்யம் ஆகும். இன்றும், தமிழகத்தின் எந்த ஊருக்குச் சென்றாலும், பிள்ளையார் கோவிலைக் காண முடியும்.

ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் காட்சிக்கு எளியவராக வீற்றிருக்கும் விக்னேஸ்வரரையே குழந்தைகள் கடவுளாக முதலில் அறியத் துவங்குகின்றன. மழலைகள் விரும்பும் யானைமுகம் கொண்டிருப்பதே அவரை நோக்கி புதிய பக்தர்களை ஈர்ப்பதாக உள்ளது.

குடகிலிருந்து தமிழகம் நோக்கி 'காவிரி' நதியைப் பாயவிட்டவர் கணேசனே என்று புராணம் கூறும். காக்கையாய் வந்து தமிழ்முனிவர் அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து மக்களின் தாகம் தீர்த்தவர் விநாயகர்.

நாட்டில் விநாயகப் பெருமானுக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், கணேச உற்சவத்தை முன்னெடுத்து அதன்மூலமாக மக்களை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்தார்.  அவரது வெற்றியைத் தொடர்ந்தே, தனது அரசியல் இயக்கத்தை ஆன்மிக அடிப்படையில் அமைத்தார், மகாத்மா காந்தி. "கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- குணம் உயர்ந்திடவே, விடுதலை கூடி மகிழ்ந்திடவே'' என்று, திலகரின் சீடர் மகாகவி பாரதி பாடி மகிழ்ந்தார்.

கொழுக்கட்டையும் தோப்புக்கரணமும் கணபதிக்குப் பிரியமானவை. இவ்விரண்டுமே பக்தர்களின் உடல்நலனை மேம்படுத்த வல்லவை. கணபதிக்கு அர்ச்சிக்கப் பயன்படுத்தப்படும் அருகம்புல்லும் வெப்பம் குறைக்கும் அரிய மூலிகை.

இந்த விநாயக சதுர்த்தி நன்னாளில், அந்தத் தூயவனை வணங்கி, நாடு நலம்பெற பிரார்த்திப்போம். கணநாதர் அருள் இருந்தால் தடைகள் அகலும்; தன்னம்பிக்கை பெருகும். வினைகள் ஒழியும்; நம் வாழ்வும் ஒளிரும்.


நன்றி: தினமணி  (விநாயக சதுர்த்தி சிறப்பிதழ்)
.

Saturday, August 27, 2011

எண்ணங்கள்


ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஊழல்  குற்றச்சாட்டுகளை அடுத்து கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா பதவி விலகியது, பிற கட்சிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதோ இல்லையோ, அவர் சார்ந்த பாஜகவுக்கு நிம்மதி அளித்திருக்கும். ஊழலுக்கு எதிராக தேசிய அளவிலான போரில் முனைப்பு காட்டும் பாஜகவுக்கு எடியூரப்பா ஒரு கரும்புள்ளியே. அதைவிட, அவரை பதவியிலிருந்து விலகவைக்க பாஜக மேற்கொண்ட பகீரத முயற்சிகள், அக்கட்சி மீது பரிதாபத்தையே ஏற்படுத்தின.
எந்த ஒரு தலைவரோ, தொண்டரோ கட்சியைவிட பெரியவர் அல்ல. எந்த ஒரு கட்சியும் தேசத்தைவிட பிரதானமானது இல்லை. இதுதான் ஜனநாயகத்தின் மூலாதாரம். தொண்டர்கள் இணைந்து இயக்கமாகிறார்கள். அதை திறமையுடன் வழிநடத்துபவர்கள் தலைவர் ஆகிறார்கள். அதே தலைவர்கள் தாங்கள் வளர்த்த இயக்கத்தையே சுயநலனுக்காக அடகுவைக்கத் துணியும்போது இயக்கங்களின் நிலை கேள்விக்குறி ஆகிறது.
 
ஜனநாயக அடிப்படையில் இயங்கும் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் நிலை, இதுபோன்ற தருணங்களில் தடுமாற்றத்துக்கு உள்ளாவது இயற்கையே. தனிநபரை முதன்மையாகக் கொண்ட எதேச்சதிகாரம் மிகுந்த கட்சிகளுக்கு இத்தகைய தர்மசங்கடங்கள் நேர்வதில்லை. இதற்கு மிகச் சரியான உதாரணம், காங்கிரஸ் கட்சி.
 
அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கே ஆயினும், நேரு குடும்பத்தின் ஆளுகைக்கு உட்பட்டாக வேண்டும். திமுக, அதிமுக, சமாஜ்வாதி, சிவசேனை, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், தெலுங்குதேசம் என பெரும்பாலான அரசியல் கட்சிகளிலும் குடும்ப ஆதிக்கம் அல்லது தனிநபர் ஆதிக்கமே கட்சியை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
 
மாறாக, கொள்கையை முன்னிலைப்படுத்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு அடிக்கடி இத்தகைய சிக்கல்கள் நேரிடுகின்றன. பிற கட்சிகளின் செயல்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கம் இக்கட்சிகளையும் பாதிக்கிறது.
 
இதில் வேடிக்கை என்னவென்றால், தனிநபர் மேலாதிக்கம் மிகுந்த கட்சிகளைப் பாராட்டும் ஊடகங்கள், அவற்றில் உள்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்படுவதைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள்- உள்கட்சி ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் கட்சிகள் சுயநலத் தலைவர்களிடம் சிக்கித் தவிக்கும்போது, அவற்றை மேலும் காயப்படுத்துகின்றன.
 
பாஜகவுக்கு உயர்மட்டத் தலைவர்கள் பிரச்னையாவது புதிதல்ல. அதன் முந்தைய வடிவமான ஜனசங்கத்தின் அகில பாரதத் தலைவராக இருந்த பால்ராஜ் மதோக் கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதற்காக நீக்கப்பட்டிருக்கிறார். கோவிந்தாச்சார்யா, சங்கர்சிங் வகேலா, உமாபாரதி, கல்யாண் சிங், ஜஸ்வந்த் சிங் என சமீபகாலத்தில் கட்சிக்குள் சர்ச்சையைக் கிளப்பிய தலைவர்களுக்கு பாஜகவில் பஞ்சமில்லை.
 
மார்க்சிஸ்ட் கட்சியிலும் இதேபோன்ற காட்சிகள் உண்டு. திரிபுராவின் முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தியும், கேரளாவின் கெüரியம்மாளும் மக்களவைத் தலைவராக இருந்த சோம்நாத் சட்டர்ஜியும் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் கூட கேரளா மார்க்சிஸ்ட் கட்சிக்குள் நிகழ்ந்துவரும் பினராயி விஜயன்- அச்சுதானந்தன் மோதல் அனைவரும் அறிந்தது.
ஆனால், இந்தியாவில் உள்ள கட்சிகளில் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே உள்கட்சி ஜனநாயகம் ஓரளவேனும் காக்கப்படுகிறது. சரியான கால இடைவெளிகளில்  கீழிருந்து மேல்மட்டம் வரை உள்கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது இக்கட்சிகளில் மட்டுமே.
 
இதன் காரணமாகவே, எந்த ஒரு பதவியிலும் யாரும் நிலையாக ஒட்டிக்கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை இக்கட்சிகளில் காணப்படுகிறது. புதிய தலைவர்கள் உருவாக இம்முறை வழிவகுத்தாலும், நிலையான ஆளுமை கொண்ட தலைவர்கள் இக்கட்சிகளில் உருவாவதில்லை. நரேந்திர மோடி, ஜோதிபாசு போன்ற தலைவர்கள் இதில் விதிவிலக்கு.
 
அத்வானி போன்ற மாபெரும் ஆளுமைகளும் கூட கட்சிக் கட்டுப்பாட்டின் முன் சரணடைந்த நிலையையும் கண்டிருக்கிறோம். அத்வானி தனக்கு கட்சியில் ஏற்பட்ட சரிவையும் கூட, கொள்கைக்கு முக்கியத்துவம் தந்ததால் பொறுத்துக் கொண்டார். அதையே எடியூரப்பாவிடமும் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். இது பாஜகவுக்கு கிடைத்துள்ள பாடம்.
 
எடியூரப்பாவும் அத்வானி வளர்ந்த அதே லட்சியச் சூழலில் வளர்க்கப்பட்டவர்தான். ஆனால், தனிநபர் குணாம்சங்கள் லட்சியக் கனவுகளை வென்றுவிடுகின்றன. இதற்கு தற்போதைய சுயநல அரசியல் உலகமும் ஒரு காரணம் எனில் மிகையில்லை. 
 
1990களில் ஹவாலா மோசடியில் தன்மீது புகார் கூறப்பட்டதும் தனது பதவிகளை ராஜிநாமா செய்த அத்வானி, அக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடும்வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று சபதம் செய்தார். பிறகு அவரது நேர்மை நிரூபிக்கப்பட்டது. அவரும் மீண்டும் அரசியலுக்கு வந்து பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்.
 
அதேபோன்ற தார்மீக வேகம் எடியூரப்பாவிடம் இல்லாதது பாஜகவுக்கு மட்டுமல்ல, நல்லரசியலை விரும்பும் எவருக்கும் ஏமாற்றமே. அத்வானி போன்றவர்களுக்கு ஏற்படும் சரிவு, எடியூரப்பா போன்றவர்களை குறுக்குத்திசையில் சிந்திக்கச் செய்வதைத் தவிர்க்க முடியாது.
 
அரசியலில் தார்மீக நெறிகளின் வீழ்ச்சி, நமது ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும். குறைந்தபட்சம், கொள்கையை முன்னிறுத்தும் கட்சிகளேனும் சுயநலவாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். முன்னுதாரணங்கள் போற்றப்படுவதும், பின்பற்றப்படுவதுமே இதற்கான தீர்வு. சாமானிய இந்தியனின் எதிர்பார்ப்பும் இதுவே.

 

நன்றி: தினமணி (26.08.2011)
.

Monday, August 15, 2011

வசன கவிதை - 89

மூன்றாவது சுதந்திரப் போர் 

1857:


வியாபாரியிடம் அடகுவைக்கப்பட்ட

சுயஉரிமையை மீட்கத் துடித்த

வீரர்களின் வேகத்தால் கிளர்ந்தது

சிப்பாய்க் கலகம்.


அடிமைப்பட்டதை உணர்ந்த

நம் முதல்கணம் அது.

விட்டில்பூச்சிகளாய் அதில்

விழுந்த தியாகியர் ஆயிரம்!


1947:


வீட்டுக்குள் குத்துவெட்டு

நடத்திக்கொண்டு விண்ணப்பித்த

மக்கள் இயக்கம் மந்தம்நீங்க,

அடுத்தகட்டப் போராட்டம்

அஹிம்சையாய்த் துவங்கியது.


தடியடி, தூக்குமேடை,

சிறைவாசம், கல்லுடைப்பு,

நூல்நூற்பு, பகிஷ்கரிப்பு,

எனப் படிகள் பல தாண்டி,

லட்சக் கணக்கான

தேசியப் பைத்தியங்களால்

விலங்கு உடைந்தது.

நம்மை நாமே நமக்காய்

ஆள்வது சாத்தியமானது.


2011:


இப்போது நடப்பது

மூன்றாவது கட்டம்.

அரசியல் அராஜகம்,

ஆபத்தான மதவாதம்,

இடையூறான ஊழல்

இம்மூன்றும் வெறுத்த

மூன்றாவது தலைமுறை

நடத்தும் யுத்தம்

வளரட்டும் எங்கும்!


கோடிஇளைஞர்களின்

ஆவேசத்தின் முன்பு

அதிகாரபலம் பொடியாகட்டும்!

சுயநலக் கயவரின்

அரிதாரம் கலையட்டும்!

முந்தைய அனுபவம் வழிநடத்தட்டும்.

பிந்தைய தலைமுறை பயன்பெறட்டும்!

பாரதம் மீளவும் பண்படட்டும்!


நன்றி: தினமணி (கோவை) -(15.08.2011)
வந்தேமாதரம்- விளம்பரச் சிறப்பிதழ்
.

Thursday, August 4, 2011

எண்ணங்கள்


திசை திருப்பும் வாயாடிகள்... திணறுகிறது ஜனநாயகம்


இதுவரை காணாத மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு, புகார் கூறுபவர்களையே எள்ளி நகையாடி வருகிறது. லோக்பால் மசோதாவுக்காகப் போராடும் அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் மிரட்டியது இருநாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

முழுமையான லோக்பால் சட்டம் கொண்டுவராவிட்டால் தில்லியில் உண்ணாவிரதம் இருப்பதாக அண்ணா ஹசாரே அறிவித்தபோது, "ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஹசாரேவுக்கும் ஏற்படும்' என்று எச்சரித்தார் திக்விஜய் சிங். அதன்மூலமாக, ஊடகங்களின் கவனத்தை சில நாட்களுக்கு திசை திருப்பினார் அவர்.

இதன்மூலமாக யோகாகுரு பாபா ராம்தேவையும் அண்ணா ஹசாரேவையும் ஒப்புமைப்படுத்தினார் திக்விஜய் சிங். இவ்வாறு இருவேறு தரப்பினரை இணைத்துப் பேசுவதும், அதற்கு இரு தரப்பினரும் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதும் இவருக்கு கைவந்த கலை.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது 2ஜி ஊழலில் புகார் கூறப்பட்டவுடன், அதுபற்றிப் பேசாமல், சம்பந்தமே இல்லாமல் வலதுசாரி தீவிரவாதம் குறித்து எச்சரித்தார் அவர். மும்பையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பை திசைதிருப்ப இந்து இயக்கங்களை வம்புக்கு இழுத்தார் திக்விஜய் சிங்.

சீறிவரும் காளையை துணியால் போக்குக் காட்டி திசை மாற்றும் உத்தியே இது. இப்போதைக்கு கபில் சிபல், மணிஸ் திவாரி, ஜெயந்தி நடராஜன் போன்ற பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கடைபிடிக்கும் தந்திரம் இதுவே.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களை மிகவும் லாவகமாகக் கையாள்வார். சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எதிரிகளை நிந்திப்பதும், கேள்வி கேட்பவர்களையே திசைதிருப்பி திக்குமுக்காட வைப்பதும் கருணாநிதியின் தனித்திறன். அதை திமுகவின் கூட்டாளியான காங்கிரஸýம் கற்றுக் கொண்டுவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது.

"சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வழிநடத்தப்படுகிறார்' என்ற, அமைச்சர் கபில் சிபலின் வாதமும் இதே வகையானதுதான். இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதே கபில் சிபலின் நோக்கம். ஊழலுக்கு எதிராகப் போராட ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உரிமை உண்டு என்பது தெரியாதவரல்ல கபில் சிபல். ஆனால், மதவாத முத்திரை குத்தி ஊழலுக்கு எதிரான அறப் போராட்டத்தை சிதைப்பதே அவரது திட்டம்.

அண்ணா ஹசாரேவும், சந்தோஷ் ஹெக்டேவும் பாஜக-வுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் நன்றாகவே அறிவர். கர்நாடகாவில் எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆப்பு வைத்தவர் சந்தோஷ் ஹெக்டே. மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக- சிவசேனை கூட்டணி அரசுக்கு எதிராகப் போராடி இருக்கிறார் ஹசாரே. ஆயினும் இரு தரப்பினரையும் கள்ள உறவாளிகளாகச் சித்தரிப்பது காங்கிரஸ்காரர்களின் தொடர் முயற்சியாக உள்ளது. இதற்கு பதிலளித்து தங்கள் சக்தியை விரயம் செய்கிறார்கள் ஊழலுக்கு எதிரான போராளிகள்.

இந்தப் பிரித்தாளும் தந்திரத்தை தெரிந்தோ தெரியாமலோ தொலைக்காட்சி ஊடகங்களும் பின்பற்றுகின்றன. யோகாகுரு பாபா ராம்தேவ் கூறுவதுபோல,  உண்ணாவிரதம் துவங்கும் முன்னர் காங்கிரஸ் காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் அவர் சர்ச்சைக்குரியவராகத் தெரியவில்லை. பிறகே அவரது சொத்துக்கள் தோண்டப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு சமய சஞ்சீவியாக கைகொடுப்பவையாக ஆங்கில ஊடகங்கள் உள்ளன. அவற்றுக்கு தீனி போடுவது, திக்விஜய் சிங் வகையறாக்களின் வேலையாக உள்ளது.

ஊடக மேலாண்மை மட்டுமே போதும், ஊழல் படுகுழியிலிருந்து வெளிவந்துவிடலாம் என்று காங்கிரஸ் நம்புவதாகத் தெரிகிறது. அதற்காகவே வகுப்புக் கலவர தடுப்பு மசோதா போன்ற விபரீதமான முயற்சிகளையும் மத்திய அரசு அரங்கேற்றுகிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஊழல்புகார்களிலிருந்து அரசு தப்புவதற்கான கேடயங்களாக கர்நாடக அரசியலும், வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவும் இருக்கும் என்பது திண்ணம்.

பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவோ, வார்த்தை வித்தகர்களான காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லுக்கு நிற்பதிலேயே காலம் கடத்துகிறது. தன்மீதான தாக்குதலைத் தடுக்க முரட்டுத்தனமான தாக்குதல் நடத்துவது சதுரங்க விளையாட்டில் முக்கியமான தற்காப்பு உத்தி. இதையே காங்கிரஸ் செய்கிறது. இது புரியாமல், ஊழலுக்கு எதிராக பிரிந்துநின்று போராடும் பல தரப்பினரும் மேலும் பிளவுபடுகிறார்கள்.

"எதிர்க்கட்சிகள் மட்டும் யோக்கியமா என்ன?' என்று அண்மையில், திருவாளர் பரிசுத்தமாகப் போற்றப்படும் நமது பிரதமர் மன்மோகன் கேட்டிருக்கிறார். அதாவது, தான் யோக்கியமில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சிகளை தம்முடன் ஒப்பிடுகிறார்.

ஒருவேளை பிரதமரின் இந்த வாக்குமூலம் பிரச்னையை ஏற்படுத்தினால், இருக்கவே இருக்கிறது ராகுல் புராணம். மாயாவதி, நக்ஸல் பிரச்னை, குஜராத் விவகாரம், ரயில் விபத்துக்கள் என்று ஏதாவது ஒரு பிரச்னையைப் பெரிதுபடுத்தினால், இந்த விஷயம் சிறியதாகிவிடும்.

நூறுகோடி மக்களின் ஜனநாயகம் இப்போது சில வாயாடிகளின் வார்த்தை விளையாட்டுக்களில் சிக்கித் தவிப்பது குறித்து நாம் அறிந்திருக்கிறோமா? நமது ஜனநாயகத்தை அண்ணா ஹசாரே, ராம்தேவ் போன்ற சாமியாடிகள் தான் மீட்க வேண்டும்.

நன்றி: தினமணி (04.08.2011) தலையங்கப் பக்க துணைக் கட்டுரை. 
.