Friday, September 9, 2011

எண்ணங்கள்

வாழ்வை இனிதே ருசிக்க
கொண்டாடுவோம் திருவோணம்!



(மகாபலிபுரம் சிற்பக்காட்சி)

நமது பண்பாடு மிகப் பழமையானது. அதிலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் என தனித்த குணாசிசயங்களுடன் கூடிய பண்டிகைகள் உள்ளன. தமிழகத்தில் பொங்கல் திருவிழா, கர்நாடகாவில் தசரா, ஆந்திராவில் யுகாதி, பஞ்சாபில் பைசாகி திருவிழா, வங்கத்தில் துர்க்கா பூஜை, மகாராஷ்டிராவில் கணேச சதுர்த்தி, வடமாநிலங்களில் ஹோலி, காஷ்மீரில் ஜிரி மேளா... என பண்டிகைகள் பலவிதம். இவை அனைத்தின் நோக்கம், மக்களைப் பிணைப்பதும், வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்துவதுமே.

அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, அலாதியான சிறப்புகளுடன் மலையாள மக்களை மகிழ்விக்கிறது.

தன்னகந்தையால் அழிந்த மகாபலி மன்னனுக்கு திருமால் அளித்த வரத்தின் பயனாக, ஆண்டுக்கு ஒருமுறை தனது நாட்டு மக்களின் நலத்தை அறிய மகாபலி சக்கரவர்த்தியே பாதாளத்திலிருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்க கேரளம் முழுவதும் வண்ணக்கோலமாக மாறும் அழகே அழகு.

சிவன் கோவிலில் அணையும் நிலையிலிருந்த விளக்கின் திரியைத் தூண்டி எரியச் செய்த எலிக்கு புண்ணியம் கிடைத்தது. அது அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறப்பெடுத்தது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த எண்ணமே, ஆலயப் பணிகளில் மக்களை ஊக்கமுடன் ஈடுபடுத்துவதாக உள்ளது.

நல்லாட்சிக்கு இலக்கணமாக நாட்டை ஆண்டுவந்த மகாபலி, தானத்தில் சிறந்தவராகவும் விளங்கினார். நாடி வந்தவர்களுக்கு இல்லையென மறுக்காமல் தானம் செய்வதே மகாபலியின் இயல்பு. இவரால் போரில் வெல்லப்பட்ட தேவர்கள் திருமாலைச் சரணடையவே, வாமன அவதாரம் எடுத்து மகாபலியை சம்ஹாரம் செய்தார் என்று பாகவதம் கூறும். எத்தகைய வீரனும் அகந்தையால் அழிவான் என்பதையும் மகாபலியின் வாழ்க்கை நமக்கு காட்டுகிறது.

எனினும், தனது தான தர்மத்தின் வலிமையால் இறைவனிடம் அவர் பெற்ற வரமே, அற்புதமான ஓணம் பண்டிகையை நாம் கொண்டாட வழிவகுத்திருக்கிறது. மூன்றடி நிலம் கேட்ட குறுமுனியின் தந்திரத்தை அறிந்தும், வாக்குத் தவறா வாய்மையின் இலக்கணமாக, தாரை வார்த்தார் மகாபலி. வாமனன் திரிவிக்கிரமனாக வளர்ந்து வானையும் பூமியையும் அளந்து நின்றபோது, தனது தலையையே மூன்றாம் அடிக்குக் கொடுத்து, மலையாள நாயகன் ஆனார்.

அன்று அவர் இறைவனிடம் கேட்ட வரமும் கூட மக்கள்நலம் சார்ந்ததாகவே இருப்பது, இன்றைய ஆட்சியாளர்களுக்கான பாடம். தனது மக்கள் நலமாக இருக்கிறார்களா என்று காண வரும் மன்னனை மகிழ்விக்க விழா கொண்டாடி தாமும் மகிழ்கிறார்கள் மக்கள். மக்கள் நலனை விரும்பும் மன்னன்! மன்னன் சந்தோஷமாகத் திரும்ப வேண்டும் என்று விரும்பும் மக்கள்!

ஓணம் திருவிழாவுக்கே உரித்தான ஓணம் சத்ய விருந்து, அத்தப் பூக்களம், ஓணக்களி, வள்ளம்களி ஆகியவை கேரளத்தின் சிறப்பைப் பறைசாற்றுகின்றன. இந்நிகழ்வுகளில் களிக்கும் தம் மக்களைக் கண்டு மகிழ்ந்து ஆசி அளித்து பாதாளம் திரும்புகிறார் மகாபலி.

இந்த விழாவின் இனிய நினைவுகளுடன் அடுத்த ஆண்டு வரை உழைப்பதற்கான உற்சாக ஊற்று எங்கும் பரவுகிறது. நமது முன்னோர் வாழத் தெரிந்தவர்கள். வாழ்வை இனிமையாக்கத் தெரிந்தவர்கள். அவர்கள் வழியில் நாமும் கொண்டாடுவோமா திருவோணம்?

நன்றி: தினமணி - கோவை (ஓண நிலாவு- விளம்பரச் சிறப்பிதழ்- 08.09.2011 )

Thursday, September 1, 2011

எண்ணங்கள்


 

பாரதம் எழுதிய 
முதல்வோன்

நமது நாட்டில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்கு பல முதன்மைகள் உண்டு. மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை மகரிஷி வியாசர் சொல்லச் சொல்ல எழுதிய முதல் எழுத்தாளர் இவரே. பல லட்சம் சுலோகங்கள் கொண்ட மகாபாரதம், விநாயகரின் உடைந்த தந்தத்தால் எழுதப்பட்டது என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை.

எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் விநாயகப் பெருமானை வணங்கித் துவக்குவது நமது மரபு. திரிபுர அரக்கர்கள் மீது போர் தொடுத்த ஈசன், விநாயகரை மறந்ததால் அவரது தேரச்சு முறிந்த கதையை விநாயக புராணம் கூறுகிறது. இன்றும் "பிள்ளையார் சுழி'யுடன் கணக்குப் பதிவேடுகள் துவங்குவதைக் காண்கிறோம்.

இந்து மதத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டிலும் வழிபடப்படும் பிரிய தெய்வமாகவும் விநாயகர் விளங்குகிறார். சைவக் கோவில்களில் கணபதியாக வீற்றிருக்கும் விநாயகர், வைணவக் கோவில்களில் தும்பிக்கை ஆழ்வாராக அருள்பாலிக்கிறார். தனது வாஞ்சையான தரிசனம் மூலமாக, இருமதப் பிரிவினரையும் அரவணைப்பது கணநாதரின் சிறப்பு. 

விநாயகரின் திருவிளையாடல்கள் குறித்த கதைகள், அவர்மீதான அபிமானத்தால் எழுந்தவை. தமிழ்க்கடவுள் குமரனின் அண்ணனாகவும், சிவ- சக்தி மைந்தனாகவும், மால் மருகனாகவும் கருதப்படுவதால்தான் சமய ஒருமைப்பாட்டை இவரால் எளிதாகக் கொண்டுவர முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அறுசமய வழிபாடாக ஆதிசங்கரரால் வழிபாட்டு முறைகள் தொகுக்கப்பட்டபோது, "கணாபத்யம்' என்ற முறையை அதில் இணைத்தார். இதிலிருந்து, இவ்வழிபாட்டு முறையின் பழமை தெரிய வருகிறது. கணபதியை முதற்கடவுளாக வழிபடுவதே கணாபத்யம் ஆகும். இன்றும், தமிழகத்தின் எந்த ஊருக்குச் சென்றாலும், பிள்ளையார் கோவிலைக் காண முடியும்.

ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் காட்சிக்கு எளியவராக வீற்றிருக்கும் விக்னேஸ்வரரையே குழந்தைகள் கடவுளாக முதலில் அறியத் துவங்குகின்றன. மழலைகள் விரும்பும் யானைமுகம் கொண்டிருப்பதே அவரை நோக்கி புதிய பக்தர்களை ஈர்ப்பதாக உள்ளது.

குடகிலிருந்து தமிழகம் நோக்கி 'காவிரி' நதியைப் பாயவிட்டவர் கணேசனே என்று புராணம் கூறும். காக்கையாய் வந்து தமிழ்முனிவர் அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து மக்களின் தாகம் தீர்த்தவர் விநாயகர்.

நாட்டில் விநாயகப் பெருமானுக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், கணேச உற்சவத்தை முன்னெடுத்து அதன்மூலமாக மக்களை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்தார்.  அவரது வெற்றியைத் தொடர்ந்தே, தனது அரசியல் இயக்கத்தை ஆன்மிக அடிப்படையில் அமைத்தார், மகாத்மா காந்தி. "கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- குணம் உயர்ந்திடவே, விடுதலை கூடி மகிழ்ந்திடவே'' என்று, திலகரின் சீடர் மகாகவி பாரதி பாடி மகிழ்ந்தார்.

கொழுக்கட்டையும் தோப்புக்கரணமும் கணபதிக்குப் பிரியமானவை. இவ்விரண்டுமே பக்தர்களின் உடல்நலனை மேம்படுத்த வல்லவை. கணபதிக்கு அர்ச்சிக்கப் பயன்படுத்தப்படும் அருகம்புல்லும் வெப்பம் குறைக்கும் அரிய மூலிகை.

இந்த விநாயக சதுர்த்தி நன்னாளில், அந்தத் தூயவனை வணங்கி, நாடு நலம்பெற பிரார்த்திப்போம். கணநாதர் அருள் இருந்தால் தடைகள் அகலும்; தன்னம்பிக்கை பெருகும். வினைகள் ஒழியும்; நம் வாழ்வும் ஒளிரும்.


நன்றி: தினமணி  (விநாயக சதுர்த்தி சிறப்பிதழ்)
.

Saturday, August 27, 2011

எண்ணங்கள்


ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஊழல்  குற்றச்சாட்டுகளை அடுத்து கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா பதவி விலகியது, பிற கட்சிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதோ இல்லையோ, அவர் சார்ந்த பாஜகவுக்கு நிம்மதி அளித்திருக்கும். ஊழலுக்கு எதிராக தேசிய அளவிலான போரில் முனைப்பு காட்டும் பாஜகவுக்கு எடியூரப்பா ஒரு கரும்புள்ளியே. அதைவிட, அவரை பதவியிலிருந்து விலகவைக்க பாஜக மேற்கொண்ட பகீரத முயற்சிகள், அக்கட்சி மீது பரிதாபத்தையே ஏற்படுத்தின.
எந்த ஒரு தலைவரோ, தொண்டரோ கட்சியைவிட பெரியவர் அல்ல. எந்த ஒரு கட்சியும் தேசத்தைவிட பிரதானமானது இல்லை. இதுதான் ஜனநாயகத்தின் மூலாதாரம். தொண்டர்கள் இணைந்து இயக்கமாகிறார்கள். அதை திறமையுடன் வழிநடத்துபவர்கள் தலைவர் ஆகிறார்கள். அதே தலைவர்கள் தாங்கள் வளர்த்த இயக்கத்தையே சுயநலனுக்காக அடகுவைக்கத் துணியும்போது இயக்கங்களின் நிலை கேள்விக்குறி ஆகிறது.
 
ஜனநாயக அடிப்படையில் இயங்கும் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் நிலை, இதுபோன்ற தருணங்களில் தடுமாற்றத்துக்கு உள்ளாவது இயற்கையே. தனிநபரை முதன்மையாகக் கொண்ட எதேச்சதிகாரம் மிகுந்த கட்சிகளுக்கு இத்தகைய தர்மசங்கடங்கள் நேர்வதில்லை. இதற்கு மிகச் சரியான உதாரணம், காங்கிரஸ் கட்சி.
 
அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கே ஆயினும், நேரு குடும்பத்தின் ஆளுகைக்கு உட்பட்டாக வேண்டும். திமுக, அதிமுக, சமாஜ்வாதி, சிவசேனை, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், தெலுங்குதேசம் என பெரும்பாலான அரசியல் கட்சிகளிலும் குடும்ப ஆதிக்கம் அல்லது தனிநபர் ஆதிக்கமே கட்சியை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
 
மாறாக, கொள்கையை முன்னிலைப்படுத்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு அடிக்கடி இத்தகைய சிக்கல்கள் நேரிடுகின்றன. பிற கட்சிகளின் செயல்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கம் இக்கட்சிகளையும் பாதிக்கிறது.
 
இதில் வேடிக்கை என்னவென்றால், தனிநபர் மேலாதிக்கம் மிகுந்த கட்சிகளைப் பாராட்டும் ஊடகங்கள், அவற்றில் உள்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்படுவதைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள்- உள்கட்சி ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் கட்சிகள் சுயநலத் தலைவர்களிடம் சிக்கித் தவிக்கும்போது, அவற்றை மேலும் காயப்படுத்துகின்றன.
 
பாஜகவுக்கு உயர்மட்டத் தலைவர்கள் பிரச்னையாவது புதிதல்ல. அதன் முந்தைய வடிவமான ஜனசங்கத்தின் அகில பாரதத் தலைவராக இருந்த பால்ராஜ் மதோக் கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதற்காக நீக்கப்பட்டிருக்கிறார். கோவிந்தாச்சார்யா, சங்கர்சிங் வகேலா, உமாபாரதி, கல்யாண் சிங், ஜஸ்வந்த் சிங் என சமீபகாலத்தில் கட்சிக்குள் சர்ச்சையைக் கிளப்பிய தலைவர்களுக்கு பாஜகவில் பஞ்சமில்லை.
 
மார்க்சிஸ்ட் கட்சியிலும் இதேபோன்ற காட்சிகள் உண்டு. திரிபுராவின் முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தியும், கேரளாவின் கெüரியம்மாளும் மக்களவைத் தலைவராக இருந்த சோம்நாத் சட்டர்ஜியும் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் கூட கேரளா மார்க்சிஸ்ட் கட்சிக்குள் நிகழ்ந்துவரும் பினராயி விஜயன்- அச்சுதானந்தன் மோதல் அனைவரும் அறிந்தது.
ஆனால், இந்தியாவில் உள்ள கட்சிகளில் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே உள்கட்சி ஜனநாயகம் ஓரளவேனும் காக்கப்படுகிறது. சரியான கால இடைவெளிகளில்  கீழிருந்து மேல்மட்டம் வரை உள்கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது இக்கட்சிகளில் மட்டுமே.
 
இதன் காரணமாகவே, எந்த ஒரு பதவியிலும் யாரும் நிலையாக ஒட்டிக்கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை இக்கட்சிகளில் காணப்படுகிறது. புதிய தலைவர்கள் உருவாக இம்முறை வழிவகுத்தாலும், நிலையான ஆளுமை கொண்ட தலைவர்கள் இக்கட்சிகளில் உருவாவதில்லை. நரேந்திர மோடி, ஜோதிபாசு போன்ற தலைவர்கள் இதில் விதிவிலக்கு.
 
அத்வானி போன்ற மாபெரும் ஆளுமைகளும் கூட கட்சிக் கட்டுப்பாட்டின் முன் சரணடைந்த நிலையையும் கண்டிருக்கிறோம். அத்வானி தனக்கு கட்சியில் ஏற்பட்ட சரிவையும் கூட, கொள்கைக்கு முக்கியத்துவம் தந்ததால் பொறுத்துக் கொண்டார். அதையே எடியூரப்பாவிடமும் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். இது பாஜகவுக்கு கிடைத்துள்ள பாடம்.
 
எடியூரப்பாவும் அத்வானி வளர்ந்த அதே லட்சியச் சூழலில் வளர்க்கப்பட்டவர்தான். ஆனால், தனிநபர் குணாம்சங்கள் லட்சியக் கனவுகளை வென்றுவிடுகின்றன. இதற்கு தற்போதைய சுயநல அரசியல் உலகமும் ஒரு காரணம் எனில் மிகையில்லை. 
 
1990களில் ஹவாலா மோசடியில் தன்மீது புகார் கூறப்பட்டதும் தனது பதவிகளை ராஜிநாமா செய்த அத்வானி, அக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடும்வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று சபதம் செய்தார். பிறகு அவரது நேர்மை நிரூபிக்கப்பட்டது. அவரும் மீண்டும் அரசியலுக்கு வந்து பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்.
 
அதேபோன்ற தார்மீக வேகம் எடியூரப்பாவிடம் இல்லாதது பாஜகவுக்கு மட்டுமல்ல, நல்லரசியலை விரும்பும் எவருக்கும் ஏமாற்றமே. அத்வானி போன்றவர்களுக்கு ஏற்படும் சரிவு, எடியூரப்பா போன்றவர்களை குறுக்குத்திசையில் சிந்திக்கச் செய்வதைத் தவிர்க்க முடியாது.
 
அரசியலில் தார்மீக நெறிகளின் வீழ்ச்சி, நமது ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும். குறைந்தபட்சம், கொள்கையை முன்னிறுத்தும் கட்சிகளேனும் சுயநலவாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். முன்னுதாரணங்கள் போற்றப்படுவதும், பின்பற்றப்படுவதுமே இதற்கான தீர்வு. சாமானிய இந்தியனின் எதிர்பார்ப்பும் இதுவே.

 

நன்றி: தினமணி (26.08.2011)
.

Monday, August 15, 2011

வசன கவிதை - 89

மூன்றாவது சுதந்திரப் போர் 

1857:


வியாபாரியிடம் அடகுவைக்கப்பட்ட

சுயஉரிமையை மீட்கத் துடித்த

வீரர்களின் வேகத்தால் கிளர்ந்தது

சிப்பாய்க் கலகம்.


அடிமைப்பட்டதை உணர்ந்த

நம் முதல்கணம் அது.

விட்டில்பூச்சிகளாய் அதில்

விழுந்த தியாகியர் ஆயிரம்!


1947:


வீட்டுக்குள் குத்துவெட்டு

நடத்திக்கொண்டு விண்ணப்பித்த

மக்கள் இயக்கம் மந்தம்நீங்க,

அடுத்தகட்டப் போராட்டம்

அஹிம்சையாய்த் துவங்கியது.


தடியடி, தூக்குமேடை,

சிறைவாசம், கல்லுடைப்பு,

நூல்நூற்பு, பகிஷ்கரிப்பு,

எனப் படிகள் பல தாண்டி,

லட்சக் கணக்கான

தேசியப் பைத்தியங்களால்

விலங்கு உடைந்தது.

நம்மை நாமே நமக்காய்

ஆள்வது சாத்தியமானது.


2011:


இப்போது நடப்பது

மூன்றாவது கட்டம்.

அரசியல் அராஜகம்,

ஆபத்தான மதவாதம்,

இடையூறான ஊழல்

இம்மூன்றும் வெறுத்த

மூன்றாவது தலைமுறை

நடத்தும் யுத்தம்

வளரட்டும் எங்கும்!


கோடிஇளைஞர்களின்

ஆவேசத்தின் முன்பு

அதிகாரபலம் பொடியாகட்டும்!

சுயநலக் கயவரின்

அரிதாரம் கலையட்டும்!

முந்தைய அனுபவம் வழிநடத்தட்டும்.

பிந்தைய தலைமுறை பயன்பெறட்டும்!

பாரதம் மீளவும் பண்படட்டும்!


நன்றி: தினமணி (கோவை) -(15.08.2011)
வந்தேமாதரம்- விளம்பரச் சிறப்பிதழ்
.

Thursday, August 4, 2011

எண்ணங்கள்


திசை திருப்பும் வாயாடிகள்... திணறுகிறது ஜனநாயகம்


இதுவரை காணாத மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு, புகார் கூறுபவர்களையே எள்ளி நகையாடி வருகிறது. லோக்பால் மசோதாவுக்காகப் போராடும் அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் மிரட்டியது இருநாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

முழுமையான லோக்பால் சட்டம் கொண்டுவராவிட்டால் தில்லியில் உண்ணாவிரதம் இருப்பதாக அண்ணா ஹசாரே அறிவித்தபோது, "ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஹசாரேவுக்கும் ஏற்படும்' என்று எச்சரித்தார் திக்விஜய் சிங். அதன்மூலமாக, ஊடகங்களின் கவனத்தை சில நாட்களுக்கு திசை திருப்பினார் அவர்.

இதன்மூலமாக யோகாகுரு பாபா ராம்தேவையும் அண்ணா ஹசாரேவையும் ஒப்புமைப்படுத்தினார் திக்விஜய் சிங். இவ்வாறு இருவேறு தரப்பினரை இணைத்துப் பேசுவதும், அதற்கு இரு தரப்பினரும் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதும் இவருக்கு கைவந்த கலை.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது 2ஜி ஊழலில் புகார் கூறப்பட்டவுடன், அதுபற்றிப் பேசாமல், சம்பந்தமே இல்லாமல் வலதுசாரி தீவிரவாதம் குறித்து எச்சரித்தார் அவர். மும்பையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பை திசைதிருப்ப இந்து இயக்கங்களை வம்புக்கு இழுத்தார் திக்விஜய் சிங்.

சீறிவரும் காளையை துணியால் போக்குக் காட்டி திசை மாற்றும் உத்தியே இது. இப்போதைக்கு கபில் சிபல், மணிஸ் திவாரி, ஜெயந்தி நடராஜன் போன்ற பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கடைபிடிக்கும் தந்திரம் இதுவே.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களை மிகவும் லாவகமாகக் கையாள்வார். சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எதிரிகளை நிந்திப்பதும், கேள்வி கேட்பவர்களையே திசைதிருப்பி திக்குமுக்காட வைப்பதும் கருணாநிதியின் தனித்திறன். அதை திமுகவின் கூட்டாளியான காங்கிரஸýம் கற்றுக் கொண்டுவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது.

"சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வழிநடத்தப்படுகிறார்' என்ற, அமைச்சர் கபில் சிபலின் வாதமும் இதே வகையானதுதான். இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதே கபில் சிபலின் நோக்கம். ஊழலுக்கு எதிராகப் போராட ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உரிமை உண்டு என்பது தெரியாதவரல்ல கபில் சிபல். ஆனால், மதவாத முத்திரை குத்தி ஊழலுக்கு எதிரான அறப் போராட்டத்தை சிதைப்பதே அவரது திட்டம்.

அண்ணா ஹசாரேவும், சந்தோஷ் ஹெக்டேவும் பாஜக-வுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் நன்றாகவே அறிவர். கர்நாடகாவில் எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆப்பு வைத்தவர் சந்தோஷ் ஹெக்டே. மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக- சிவசேனை கூட்டணி அரசுக்கு எதிராகப் போராடி இருக்கிறார் ஹசாரே. ஆயினும் இரு தரப்பினரையும் கள்ள உறவாளிகளாகச் சித்தரிப்பது காங்கிரஸ்காரர்களின் தொடர் முயற்சியாக உள்ளது. இதற்கு பதிலளித்து தங்கள் சக்தியை விரயம் செய்கிறார்கள் ஊழலுக்கு எதிரான போராளிகள்.

இந்தப் பிரித்தாளும் தந்திரத்தை தெரிந்தோ தெரியாமலோ தொலைக்காட்சி ஊடகங்களும் பின்பற்றுகின்றன. யோகாகுரு பாபா ராம்தேவ் கூறுவதுபோல,  உண்ணாவிரதம் துவங்கும் முன்னர் காங்கிரஸ் காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் அவர் சர்ச்சைக்குரியவராகத் தெரியவில்லை. பிறகே அவரது சொத்துக்கள் தோண்டப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு சமய சஞ்சீவியாக கைகொடுப்பவையாக ஆங்கில ஊடகங்கள் உள்ளன. அவற்றுக்கு தீனி போடுவது, திக்விஜய் சிங் வகையறாக்களின் வேலையாக உள்ளது.

ஊடக மேலாண்மை மட்டுமே போதும், ஊழல் படுகுழியிலிருந்து வெளிவந்துவிடலாம் என்று காங்கிரஸ் நம்புவதாகத் தெரிகிறது. அதற்காகவே வகுப்புக் கலவர தடுப்பு மசோதா போன்ற விபரீதமான முயற்சிகளையும் மத்திய அரசு அரங்கேற்றுகிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஊழல்புகார்களிலிருந்து அரசு தப்புவதற்கான கேடயங்களாக கர்நாடக அரசியலும், வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவும் இருக்கும் என்பது திண்ணம்.

பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவோ, வார்த்தை வித்தகர்களான காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லுக்கு நிற்பதிலேயே காலம் கடத்துகிறது. தன்மீதான தாக்குதலைத் தடுக்க முரட்டுத்தனமான தாக்குதல் நடத்துவது சதுரங்க விளையாட்டில் முக்கியமான தற்காப்பு உத்தி. இதையே காங்கிரஸ் செய்கிறது. இது புரியாமல், ஊழலுக்கு எதிராக பிரிந்துநின்று போராடும் பல தரப்பினரும் மேலும் பிளவுபடுகிறார்கள்.

"எதிர்க்கட்சிகள் மட்டும் யோக்கியமா என்ன?' என்று அண்மையில், திருவாளர் பரிசுத்தமாகப் போற்றப்படும் நமது பிரதமர் மன்மோகன் கேட்டிருக்கிறார். அதாவது, தான் யோக்கியமில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சிகளை தம்முடன் ஒப்பிடுகிறார்.

ஒருவேளை பிரதமரின் இந்த வாக்குமூலம் பிரச்னையை ஏற்படுத்தினால், இருக்கவே இருக்கிறது ராகுல் புராணம். மாயாவதி, நக்ஸல் பிரச்னை, குஜராத் விவகாரம், ரயில் விபத்துக்கள் என்று ஏதாவது ஒரு பிரச்னையைப் பெரிதுபடுத்தினால், இந்த விஷயம் சிறியதாகிவிடும்.

நூறுகோடி மக்களின் ஜனநாயகம் இப்போது சில வாயாடிகளின் வார்த்தை விளையாட்டுக்களில் சிக்கித் தவிப்பது குறித்து நாம் அறிந்திருக்கிறோமா? நமது ஜனநாயகத்தை அண்ணா ஹசாரே, ராம்தேவ் போன்ற சாமியாடிகள் தான் மீட்க வேண்டும்.

நன்றி: தினமணி (04.08.2011) தலையங்கப் பக்க துணைக் கட்டுரை. 
.

Wednesday, July 27, 2011

புதுக்கவிதை - 143


பரிதாப ஜீவன்கள்




சாலையின் இருபுறமும்

புழுதியையும் கரியையும்

ஜீரணித்தபடி நிற்கின்றன

நிழல் மரங்கள்-

கசாப்புக் கடையில் தவிக்கும்

ஆடுகள் போல.



கடந்துபோகும் வேக வாகனங்கள்

எப்போதும் ஏற்படுத்தும்

அதிர்வுகளைத் தாங்கியபடி,

மோதுமோ மோதாதோ என்ற

பதைபதைப்புடன்

காட்சி அளிக்கும் பரிதாப மரங்கள்.



சாலை விரிவாக்கத்துக்காக

அளக்கும் கருவிகளுடன் நிற்கும்

ஊழியர்களுக்கும்

அதே மரம் நிழல் தருகிறது-

எல்லைக் கோட்டுக்குள்

தான் வருவது தெரியாமல்.



அதுசரி.

தெரிந்துதான்

என்ன ஆகப் போகிறது?

தன்னை அறுக்கும் ரம்பத்தை

மௌனமாக வேடிக்கை பார்ப்பதைத் தவிர?

.

Friday, July 22, 2011

எண்ணங்கள்


அனந்த பத்மனாபரின் களஞ்சியம் 

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலில்  கண்டெடுக்கப்பட்டுள்ள  பல  லட்சம் கோடி  மதிப்புள்ள ஆலயக் கருவூலம்   பலரையும் பிரமிப்பில்  ஆழ்த்தி உள்ளது.  இந்த பெருமளவு தங்கம், நவரத்தினங்கள் உள்ளிட்ட சொத்துக்களை என்ன செய்வது என்று உபதேசிக்க, இதில் எந்த பாத்தியதையும் இல்லாத  அறிவுஜீவிகள்  கிளம்பி விட்டார்கள். கடந்த வாரங்களில்  நடந்துவரும் அனைத்து கூத்துக்களையும் கண்டபின்னும், என்ன தான் நடக்கிறது என்று அமைதி காத்ததில், அற்புதமான பலன் விளைந்திருக்கிறது.
 .
ஹிந்து ஆலய களஞ்சியங்களை சூறையாடும் ஆர்வம் கொண்டவர்கள்   யார்?  அந்த மாநில அரசின் நிலை என்ன? ஹிந்து மத காப்பாளர்களின் நிலை என்ன? இந்த விவகாரம் வெளிவரக் காரணமாக இருந்த உச்சநீதி மன்றத்தின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் இப்போது தெளிவாகி விட்டது.
 .
இடதுசாரி சிந்தனை சார்ந்தவர்கள் எப்போதுமே ஆலயத்தை மதிப்பவர்கள் அல்ல;  அவர்கள் கிடைத்த  களஞ்சியத்தை  மக்கள் நலனுக்கு செலவிட வேண்டும் என்று சொன்னதில் வியப்பில்லை. வரலாற்று நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர்தான் இதில் சறுக்கினார்கள். கிடைத்துள்ள களஞ்சியத்தின் சரித்திர மதிப்பை உணர்ந்தும், கீழ்மை உணர்வால், தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்தார்கள் அவர்கள்.
 .
ஆனால், கேரள  மாநில முதல்வர் உம்மன்  சாண்டி (இத்தனைக்கும்  இவர் கிறிஸ்தவர்!) ' அனந்த பத்மநாபர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து கருவூலமும் பத்மநாப சுவாமிக்கே சொந்தம்' என்று கூறி, விவாதத்திற்கு  முற்றுப்புள்ளி  வைத்திருக்கிறார்.  அவருக்கு நன்றி.
 .
தோண்டத் தோண்ட  பெருகிவந்த கருவூலம் கண்டு அதிர்ந்த நீதிமன்றம், புலிவாலைப் பிடித்ததை உணர்ந்துகொண்டு, கோவிலின் கடைசி நிலவறையைத்   திறக்க தடை விதித்திருக்கிறது. கிடைத்துள்ள சொத்துக்களின்  மதிப்பை யூகத்திற்கு ஏற்றபடி ஊடகங்களில் வெளியிட்டதையும் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
.
அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து ஆலயச் சொத்துக்களைக் காக்க ரகசிய நிலவறை அமைத்து அதில்  ஆலயச் சொத்துக்களை பத்திரப்படுத்தியதுடன், பல தலைமுறைகளாக இந்த ரகசியத்தையும் காத்துவந்துள்ள திருவாங்கூர்  மார்த்தாண்ட வர்மா வம்சம் பாராட்டப்பட வேண்டியது.
.
எண்ணிப் பாருங்கள், நாடு முழுவதும் சிதிலமாக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்ட ஹிந்து கோவில்களில் எத்தனை கோடி கருவூலங்கள் இருந்திருக்கும்? தமிழகம் மட்டும் தான் அந்நிய ஆக்கிரமிப்பில் ஓரளவேனும் தப்பிப் பிழைத்தது. ஆயினும் நிலவறைகள் உள்ள திருச்செந்தூர், திருவட்டாறு கோவில்களின் கருவூலங்கள் மாயமானதையும் நாம் அரசல் புரசலாக அறிவோம். ஹிந்து ஆலயங்கள் அரசின் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயம் இப்போது உணரப்பட்டுள்ளது.
.
திருவனந்தபுரம் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஆலயச் சொத்துக்களின் மதிப்பை குறிப்பிடுகையில் ஊடகங்கள் புலம்புகின்றன. அவற்றுக்கு ஒரு வார்த்தை. அந்த சொத்துக்களை விலை மதிப்பிட முடியாது. அப்படியே பொருள்களின் எடை அளவில் மதிப்பிடுவதாக இருந்தாலும் அவற்றின் மதிப்பு கண்டிப்பாக ரூ. 1.76  லட்சம் கோடியைத் தாண்டும் என்பது திண்ணம். 

இந்நிலையில், அனந்த பத்மநாப சுவாமி கோவிலின் களஞ்சியம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வியே தேவையில்லை என்று அறுதியிடும் கட்டுரைகள் இணைய பக்கங்களில் காணக் கிடைத்தன.

அவை இதோ...

     - இரா. நாகசாமி (தமிழ் ஹிந்து)

      -ஜெயமோகன்

      -ஜெயமோகன்

     - ஆர்.வைத்தியநாதன் (சொல்வனம்)

   - உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா நேர்காணல் (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)

    - தினமணி தலையங்கம்

.

Tuesday, July 12, 2011

வசன கவிதை - 88







வென்றவனின் பிரகடனம்


ஆள்தான் பெரிய உருவம்

ஆனால், பரிதாபம்.


எதற்குத் துரத்துகிறார்கள் என்று

ஏதும் தெரியாமலே

ஓடிக் களைத்த போதில்தான்

பிருஷ்டத்தில் அந்த ஊசி பாய்ந்தது.

அடுத்த நிமிடம் என்ன நடந்தது?

மயங்கிச் சரிந்த பெரிய உருவம்

செங்கல் சூளைக்கு மண் அகழ்ந்த குழியில்

தன்னைத் தானே புதைத்துக் கொண்டது.


ஆள் தான் பெரிய உருவம்.

மனிதரின் பகுத்தறிவு சிறிதும் இல்லாத

பரிதாபத்திற்குரிய உயிரினம்.


கழுத்தில் ஒரு மின்னணுக் கருவியை மாட்டவே

துரத்துகிறார்கள் என்பது தெரியாத முட்டாள்.

துப்பாக்கியில் சுட்டது மயக்க ஊசி தான்

என்று தெரியாத ஐந்தறிவு ஜடம்.

ஓட ஓடத் துரத்துவார்கள் என்பது அறியாமல்

புவியில் பிறந்துவிட்ட அற்பப்பதர்.

ஆள் மட்டும் பெரிதாக இருந்துவிட்டால் போதுமா?


காட்டை ஆளும் லாவகம் தெரிந்தும்

நாட்டு மக்களின் அச்சம் புரியாமல்

எல்லை தாண்டிய பேராசைக்கு

சாவு தானே பரிசு?

'அட்டகாசம்' செய்யும் தும்பிக்கையான்

இப்போது உணர்ந்திருக்கக் கூடும்

மனிதரின் வலிமையை.


அப்பாவிகளுக்கும் பரிதாபிகளுக்கும்

மனிதரின் உலகில் என்றும் இடமில்லை.

வலிமை உடையவனுக்கே உலகம் சொந்தம்.

இது, உயிருடன் உள்ள பிற யானைகள்

புரிந்துகொள்ள வேண்டிய பாடம்.


காட்டைத் தாண்டாதே; தண்டனை உண்டு.

காட்டுக்குள் வந்தாலும் அனுமதி; அதுவே உன் தலைவிதி.

இது வென்றவனின் பிரகடனம்.

------------------------------------------------

குறிப்பு: கோவை அருகே பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் கடந்த ஜூலை 9 ம் தேதி இரவு,  காட்டு யானை ஒன்றுக்கு கழுத்தில் 'ரேடியோ காலர்' என்ற மின்னணுக் கருவியை மாட்டுவதற்காக வனத்துறையினர் எடுத்த நடவடிக்கையின்போது மயக்க ஊசியால் யானை குழியில் விழுந்து பலியானது. அந்த யானைக்கு மூன்றாம் நாள் அஞ்சலி இது.

காண்க: பத்திரிகை செய்தி


படம்: இந்த யானைதான் வனத்துறை நடவடிக்கையில் பலியானதாக நம்பப்படுகிறது.
(பட உதவி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு, கோவை)

.