Tuesday, August 24, 2010

வசன கவிதை - 77



ராக்கி



இந்த சின்ன நூல் கயிறா
நம்மை ஒன்றுபடுத்துகிறது?

சாதிகளால் பிளக்கப்பட்ட,
மொழிகளால் சிதைக்கப்பட்ட,
மதங்களால் காயம்பட்ட,
பரந்த பாரத தேசத்தை
இந்த சின்ன நூல் கயிறா
ஒன்றுபடுத்துகிறது?

பிணைக்கும் சக்தி
உருவத்தில் இல்லை;
பிணைப்பின் வலிமை
கட்டப்படும் பொருளிலும் இல்லை.
வாமனனின் சிறப்பு
பாரதத்துக்கு தெரியும்.

முத்தத்தில் வெளிப்படும்
தாயின் அன்பு போல,
ராக்கியில் வெளிப்படுகிறது
சகோதரத்துவ நேசம்.
எல்லைகளை உடைத்து
மூவுலகாளும் வல்லமை
அன்பிற்கு உண்டு.

வாருங்கள்!
ராக்கி கட்டிக் கொள்ளுங்கள்;
ராக்கி அணிவியுங்கள்!
விதைக்குள் உறங்கும்
விருட்சமாய் மாறுங்கள்!
நாட்டைப் பிணைக்கும்
ராக்கியாகவே மாறுவீர்கள்!
இன்று ரக்ஷா பந்தன் தினம்.
.

Monday, August 23, 2010

வசன கவிதை - 76



திருவோணம்
வந்தல்லோ...


தமிழக கல்லூரிகளில்
அத்தப்பூக் கோலங்கள்.

அண்டை மாவட்டங்களில்
உள்ளூர் விடுமுறைகள்.

நட்சத்திர விடுதிகளில்
ஓணம் சத்யா விருந்துகள்.

கேரளம் செல்லும்
பல டன் காய்கறிகள்.

மலையாளிகளுக்கு
அரசியல்வாதிகளின் வாழ்த்துக்கள்.

பெரியாறு அணையில்
தற்காலிகமாக
நிறுத்தப்பட்ட சோதனைகள்...

-இன்று திருவோணப் பண்டிகை; கேரள சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

..

Sunday, August 22, 2010

வசன கவிதை - 75




பாமர மனிதர்கள்...





பாலக்காடு -பிளிச்சிமடாவில்
நிலத்தில் புதைத்த
கோலா கழிவுகள்;


கோவை -காரமடையில்
கப்பலில் வந்த
அமெரிக்க குப்பைகள்;


பொள்ளாச்சி அருகே
சாலையில் கொட்டிய
தோல் கழிவுகள்;


பல்லடம் அருகே
வாய்க்காலில் வீசிய
செத்த கோழிகள்;


நொய்யல் நதியில்
வண்ணமாய்ச் சேரும்
சாயக்கழிவுகள்;


ஈரோடு அருகே
இரவில் திறந்துவிடப்படும்
தொழிற்சாலையின் நெடி;


நீர், நிலம், காற்றில்
விஷத்தை விதைத்து
விளையாடும் 'புள்ளிகள்';


சாயம் கலந்த தேநீர்க்கடையில்
போபால் செய்தியை
படிக்கும் மக்கள்;


அமெரிக்க கனவுடன்
கோழிக்கறி தின்று கோலா குடிக்கும்
வண்ணஆடை அணிந்த பாமர மனிதர்கள்...
.

Saturday, August 21, 2010

வசன கவிதை - 74




புத்தரின் புன்னகை


குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது.
நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி
மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.
ஓங்கி உயர்ந்த அரசமர நிழலில்
மோன நிலையில் இருக்கிறார் புத்தர்.
மயில் ஆடிக்கொண்டிருக்கிறது;
அமைதி எங்கும் விரிந்திருக்கிறது.

ஊர்க்கோடியில் வீற்றிருக்கும்
காவியுடைத் துறவியைக் காண
கூட்டம் குழுமுகிறது; நோட்டமிடுகிறது.
வணங்கிய மக்களை வணங்கி,
அமுத மொழிகளைப் பகர்கிறார் புத்தர்:

ஆசையை விட்டொழியுங்கள்; அகிலத்தை ஆளுங்கள்.
தர்மம் செய்யுங்கள்; தர்மப் பாதையில் செல்லுங்கள்.
சங்கம் ஆகுங்கள்; சங்கமம் ஆக்குங்கள்.
புத்தன் ஆகுங்கள்; புது உலகைக் காணுங்கள்.

கூறிய புத்தனை பணிகிறது கூட்டம்.
மலர்களைத் தூவுகின்றனர் மக்கள்.
தூவிய மலர்களை திருப்பி வழங்கி
ஆசி அளிக்கும் புத்தனைக் கண்டு
ஒருவன் மனதில் குமுறும் கோபம்.

இத்தனை நாட்கள் கட்டிக் காத்த
ஆசைகள் பொய்யா? பூசைகள் பொய்யா?
சீறும் கோபம் சொல்லினில் தெறிக்க
நிந்தனை மொழிகளால் அர்ச்சனை செய்தான்.
கோபத்தாலே நரம்பு புடைக்க
கத்திய அவனை கருணை தவழ
புத்தர் பார்த்தார்; புன்னகை புரிந்தார்.

பலமணி நேரம் வசைமொழி கூறியும்
புன்னகை மாறா புத்தனைப் பார்த்து,
ஓய்ந்தான் எளியவன்; புத்தர் சிரித்தார்.
மெல்லிய குரலில் உறுதியாய் ஒலித்தார்:

பக்தர்கள் தூவிய நறுமண மலர் போலவே
உனது குறுமொழி மலர்களை
புன்னகையாலே திருப்பித் தந்தேன்;
ஆசை இல்லா உள்ளம் இருந்தால்
புகழால் போதையும், இகழால் வாதையும்
நிகழ்வது இல்லை; நித்திய உண்மை.

என்றார் புத்தர்.
எளியவன் உணர்ந்தான்.
கண்ணீர் வழிய
கரங்கள் குவித்தான்.

புத்தரின் புன்னகை எங்கும் பரவுகிறது.
உலகில் அமைதி தவழ்கிறது.
மாலைச் சூரியனின் பொற்கிரணங்கள் வருட
மான்கள் மருண்டோடுகின்றன.
உடன் புலிகள் விளையாடுகின்றன.

குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது
நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி
மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.

.

Friday, August 20, 2010

எண்ணங்கள்




படிக்க வேண்டிய கட்டுரை...



தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியாகியுள்ள, நண்பர் திரு ஜடாயுவின் கட்டுரை 'அகமதாபாதில் ஒரு நாள்' அற்புதமான படைப்பு. நட்புரிமையுடன் அக்கட்டுரையை இங்கு இணைத்துள்ளேன்.
காண்க: 'அகமதாபாதில் ஒரு நாள்'- ஜடாயு
.

Thursday, August 19, 2010

சிந்தனைக்கு


விவேக அமுதம்

மனிதன் எந்த அளவிற்கு உயர்ந்தவன் ஆகின்றானோ, அந்த அளவுக்கு அவன் சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.
-சுவாமி விவேகானந்தர்

.

Wednesday, August 18, 2010

சிந்தனைக்கு




கருவூலம்






வன்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.
-கவிச்சகரவர்த்தி கம்பர்
(கம்ப ராமாயணம்- பாலகாண்டம், நாட்டுப்படலம்- 53)


.


Tuesday, August 17, 2010

உருவக கவிதை - 58



விளையாட்டு விபரீதம்



மூட்டைப்பூச்சிக் கடி பழகிவிட்டது.
தோல் மரத்துவிட்டது.
கொசுக்கடி சகித்து
சுகமாகத் தூங்குபவர்களுக்கு
அட்டைகள் உறிஞ்சும் ரத்தம்
சாதாரணம் தான்.

குளியலறைகளிலும்
சமையலறைகளிலும்
ஊரும் கரப்பான் பூச்சிகள்;
சுவர்களில் பல்லிகள்.
தண்ணீர்த் தொட்டியில் புழுக்கள்.
எல்லாம் பழகிவிட்டது.

வீட்டிலிருக்கும் சர்க்கரையை
கொள்ளையிடும் செவ்வெறும்புகள்;
அடுப்பிலிருக்கும் பாலை
கவிழ்த்து ருசிக்கும்
திருட்டுப் பூனைகள்;
எதிர்வீட்டைக் காவல் காக்கும்
நன்றியில்லா நாய்கள்-
எல்லாமே விளையாட்டாகிவிட்டது.

இப்போதெல்லாம்
எப்போதாவது தட்டுப்படும்
தேளும் பாம்பும் பூரானும்
கண்டால் மட்டுமே அச்சம்.

அடிக்கடி நடக்கும் ஊழல்களும்
எப்போதாவது நடக்கும் விபரீதங்களும்
அரியவர்களின் எளிய
பொழுதுபோக்காகிவிட்டன;
கரவொலி எழுப்பி
கரங்கள் சிவந்து விட்டன.

தோல் மரத்துவிட்டது;
மூட்டைப்பூச்சிக் கடி பழகிவிட்டது.
.