Showing posts with label சங்கரர். Show all posts
Showing posts with label சங்கரர். Show all posts

Monday, November 9, 2009

மரபுக் கவிதை - 47



நீயும் நானே!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!

ஆண்டவனின் படைப்பினிலே அனைவரும் ஒன்று!
அதையுணர்த்த அவதரித்தார் சங்கரர் அன்று!
தூண்டுவதால் சுடராகும் ஜோதியைப் போலே
தூயோனே சங்கரரை மூண்டுஎழுப்பினான்!
(ஜய)
அன்றொரு நாள் பாலகனார் விடியற்காலையில்
அவசரமாய் நீராடித் திரும்பி வந்தனர்!
அன்றலர்ந்த தாமரை போல் தேகம் ஒளிவிட
ஆதவனை வணங்கிக்கொண்டு நடந்து வந்தனர்!
என்றாலும் மனம் குழம்பி, மதி மயங்கியே
அமைதியற்று, நடை தயங்கி வந்த போதிலே,
'சண்டாளன்' என்றொருவன் எதிரில் வந்தனன்;
சங்கரரின் பாதம் தொட்டுப் பணிந்து நின்றனன்!
(ஆண்டவனின்)
சங்கரரோ மனம் குலைந்து வெறுப்பு கொண்டனர்!
'சண்டாளன்' எனக் கூசித் தள்ளி நின்றனர்!
அங்கம் உடன் ஒளி குறைந்து மாசுபட்டது
பாலகனோ பதைபதைத்து பரிதவித்தனர்!
அப்போதே சண்டாளன் காட்சி கொடுத்தான்;
அவன் வேறு யாருமில்லை- ஈசன்! ஈசன்!
அப்போதே சங்கரரும் சபதம் எடுத்தார்;
அது வேறு எதுவுமில்லை- 'நீயும் நானே'!
(ஆண்டவனின்)
சரித்திரமாய் நம் முன்னே சங்கரர் உள்ளார்!
சற்குருவாய், ஞானத்தை வழங்கிய வல்லார்!
ஹரிஹரனை சண்மதமாய் வணங்கிடச் சொன்னார்!
சங்கமென ஒற்றுமையாய் வாழ்ந்திடச் சொன்னார்!
பிறப்பினிலே ஜாதி இல்லை! தாழ்வும் இல்லை!
சண்டாளன், மாமுனிவன் என்பதும் இல்லை!
மறப்பது ஏன், மானிடனே? மதியுள்ளோனே!
மனிதர்கள் நாம்- ஆத்மாவின் ராகம் தானே?
(ஆண்டவனின்)
(ஜய)
குறிப்பு: 1991இம் ஆண்டு காஞ்சி சங்கர மடம் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கேற்று
ஆறுதல் பரிசாக 'வெள்ளிக்காசு' பெற்ற கவிதை இது.

Tuesday, September 29, 2009

மொழிமாற்றக் கவிதை - 3



இறைவனை வழிபடு!

இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு,
இறைவனை வழிபடு அறிவிலியே!
மறைபல மனனம் செய்வதனாலுன்
மாரகம் தவிர்ந்து போய்விடுமா?

பொருள் மிக விரும்பும் மூடா, மூடா!
பொதியெநும் ஆசை அகற்றிவிடு!
தருமமுரைக்கும் கடமையினைச் செய்
தடைந்திடும் பொருளில் மகிழ்வுறுக!

மங்கையர் தனமும் நாபியும் கண்டு
மதியினை இழந்து பதறாதே!
அங்கம் முழுதும் மாமிச வடிவம்
என்பதை மனதில் எண்ணிடுக!

தாமரை இலைமேல் தண்ணீர் போல
சஞ்சலமின்றி வாழ்ந்திடுக!
பூமியை ஆளும் துயரும் நோயும்
புன்மையும் முழுதும் உணர்ந்திடுக!

செல்வம் சேர்கையில் அண்டும் சுற்றம்,
சேவகனாகப் பணியாற்றும்!
வல்லமை குன்றி மூப்படைந்தாலோ
வார்த்தை கூறவும் ஆளில்லை!

பிராணன் உடலில் உள்ள வரைக்கும்
பிரியம் இருக்கும் உன் மீது!
பிரேதமாக நீ சாய்ந்து விட்டாலோ
பிரிய மனைவியும் தள்ளி நிற்பாள்!

அன்புறு மகனை பகையாய் மாற்றும்
அம்சம் பொருளின் இயல்பன்றோ?
பொன்னும் பொருளும் என்றும் துன்பம்,
இன்பம் மெய்யாய் ஒன்றுமில்லை!

பாலகன் ஆசை விளையாட்டின் மேல்,
பதினென் வயதில் கன்னியர் மேல்!
காலம் கடந்த கிழவனின் ஆசை
கவலையில்; கடவுளைப் பிடித்தவர் யார்?

யாருன் மனைவி? யாருன் பிள்ளை?
யாரிடமிருந்து நீ வந்தாய்?
சாரும் மானிட வாழ்க்கை விந்தை
தத்துவ மிதனை எண்ணிப் பார்!

நல்லவர் நட்பால் நலியும் பற்று,
பற்றற்றவர்க்கு மயக்கமில்லை!
வல்லவர் அவர்க்கே வாய்மை விளங்கும்,
வழியது ஒன்றே முக்திக்கு!

செல்வம் இன்றேல் சுற்றம் இல்லை,
தண்ணீர் இன்றேல் குளமில்லை!
பொல்லாக் காமம் முதியோர்க்கில்லை,
தத்துவ மறிந்தால் வினையில்லை!

செல்வம், பந்தம், இளமைச் செழிப்பால்
செருக்கினை அடைந்து ஆடாதே!
எல்லாம் காலன் முன்னால் சாம்பல்,
எனவே இறையை எண்ணிடுக!

பகலும் இரவும் தினமும் மாறும்,
பருவம் பலமுறை மாறிவரும்!
அகலும் ஆயுள்; இகழும் காலம்;
ஆசைப் பிணைப்பு போவதில்லை!

இன்னருள் சங்கர பகவத்பாதர்
இருளில் உழன்ற பண்டிதனை
நன்னிலை அடைய பன்னிரு பாவால்
பண்ணிய மாலையை அருளினரே!

இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு,
இறைவனை வழிபடு அறிவிலியே!

குறிப்பு:
ஆதிங்கரர் இயற்றிய "பஜகோவிந்தம்"- த்வாதச மஞ்சரிகா ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் இது.
நன்றி: விஜயபாரதம், வேதமுரசு.