Showing posts with label அண்ணா ஹசாரே. Show all posts
Showing posts with label அண்ணா ஹசாரே. Show all posts

Thursday, January 26, 2012

எண்ணங்கள்

ஆர்எஸ்எஸ் காரரா அண்ணா ஹசாரே?

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை இயற்றப் போராடிவரும் சமூகசேவகர் அண்ணா ஹசாரே அவரது எதிரிகளால் பலவிதமாக விமர்சிக்கப்படுகிறார். காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்பதால், ஹசாரேவும் பொறுமையாக தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.

இத்தகையவர்களின் வெறுப்புக்கு காரணம் உள்ளது. தங்களையே லோக்பால் சட்டம் குறிவைக்கிறது என்பது புரிந்திருப்பதால்தான் ஊழலில் தொடர்புடையவர்கள் ஹசாரேவை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆளும்கட்சி வட்டாரத்தில், ஹசாரேவை எதிர்ப்பதற்கென்றே களம் இறக்கப்பட்டுள்ளவர் ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங். அண்ணா ஹசாரேவை வசைபாடுவதையே அவர் தினசரி வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதில் முக்கியமான விமர்சனமாக திக்விஜய் சிங் முன்வைப்பது, ஹசாரே ஆர்எஸ்எஸ்.காரர் என்பது. 

தன்மீது கூறப்படும் பிற குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாத ஹசாரே, இந்தக் குற்றச்சாட்டுக்கு மட்டுமே இதுவரை பலமுறை பதில் அளித்துவிட்டார். ஏனெனில் இந்தக் குற்றச்சாட்டின் பின்விளைவை அவர் உணர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள வலதுசாரி இயக்கங்களில் ஆர்எஸ்எஸ்சுக்கு வலிமையான பின்புலம் உண்டு. இந்து தேசியம் என்ற சித்தாந்தத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், துவக்க காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான சக்தியாக வளர்ந்து வந்துள்ளது.

இந்துத்துவத்தை முன்னிறுத்துவதால் சிறுபான்மையினருக்கு எதிரானதாக இந்த அமைப்பு சித்தரிக்கப்படுகிறது. அதேசமயம் தீவிரமான தேசபக்திக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அடையாளமாகக் கூறப்படுவதுண்டு. இயற்கைச் சீற்றங்களின்போது மக்களுக்கு தானாக முன்வந்து உதவுவதில் ஆர்எஸ்எஸ் முன்னணி வகிக்கிறது. இதை முன்னாள் ஜனாதிபதி ஜாகீர் உசேன் உள்பட பலர் பாராட்டி இருக்கின்றனர்.

1962ல் நடந்த சீனப்போரின் போது அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவிய ஆர்எஸ்எஸ்சைக் கண்டு நெகிழ்ந்த அப்போதைய பிரதமர் நேரு, 1963ம் வருடத்திய தில்லி குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் சீருடை அணிவகுப்பை இடம்பெறச் செய்தார். காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதமர் நேருவால் பாராட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தான், ஹசாரேவை பலவீனப்படுத்த ஒரு கருவியாக்குகிறார் திக்விஜய் சிங்.

இந்திய அரசியலில் யாராவது ஒருவரை ஓரம்கட்ட வேண்டுமானால் அவரை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்று குற்றம் சாட்டினால் போதும் என்ற நிலை உள்ளது.  மகாத்மா காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் ஆகியவற்றுடன் இந்த அமைப்பை தொடர்புபடுத்தி பலமடங்கு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதால், ஆர்எஸ்எஸ் முத்திரை குத்தி எவரையும் நிலைகுலையச் செய்ய முடிகிறது.

அதனால்தான், தன்மீது கூறப்படும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்ற வசையை அண்ணா ஹசாரே தொடர்ந்து நிராகரித்து வருகிறார். ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஊழலுக்கு எதிராகத் திரட்டும் தனது யுத்தத்துக்கு ஆர்எஸ்எஸ் முத்திரை தடையாக இருந்துவிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வே இதற்குக் காரணம். இதையே திக்விஜய் சிங் பயன்படுத்திக் கொள்கிறார்.

கட்டற்ற ஊழலால் கறை படிந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வேப்பங்காயாகக் கசப்பதில் வியப்பில்லை. அவரது நேர்மையான பொதுவாழ்வு, காங்கிரஸ்காரர்களால் அபாய எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.

எனவே, ஹசாரே குழுவினர் காங்கிரûஸக் குற்றம் சாட்டுவதற்கு முன்னதாகவே, அவர்களை தற்காப்பு நிலைக்குத் தள்ளி விடுவதே உசிதமானது என்பது திக்விஜய் சிங்கின் கோட்பாடு.

அந்த அடிப்படையிலேயே, ஹசாரேவை ஆர்எஸ்எஸ்காரர் என்று முத்திரை குத்துவதில் அவர் தீவிரமாக முனைந்திருக்கிறார். அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இந்தப் புகாருக்கு பதில் சொல்லவே ஹசாரேவின் நேரம் சரியாக இருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இந்தச் சிக்கலை அடிக்கடி எதிர்கொள்கிறது. வலிமையான லோக்பாலுக்காக பாஜக ஒருபுறமும் ஹசாரே மறுபுறமும் தங்கள் வழிகளில் போராடுகிறார்கள். இதையே, பாஜகவுக்கு ஹசாரே உதவுகிறார் என்று காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது.

நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வது என்ற ஹசாரேவின் முடிவையும் இந்தக் கண்ணோட்டத்தில் தான் திசைதிருப்புகிறது காங்கிரஸ். ஹசாரே நடத்திய உண்ணாவிரப் போராட்டங்களில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தாங்களாகவே பங்கேற்றதை, இவ்வாறு சதியாகவே காண்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.

ஆனால், ஒருவிஷயத்தில் ஹசாரேவுக்கு தெளிவில்லை என்றே தோன்றுகிறது. சர்வோதய இயக்கத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திராகாந்தியின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியபோது அவருடன் இயல்பாக இணைந்து போராடியது ஆர்எஸ்எஸ். அப்போது ஜெ.பியை ஆர்எஸ்எஸ் ஏஜென்ட் என்று காங்கிரஸ் வசை பாடியபோது, 'தேசபக்தர்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் தவறில்லை' என்று அவர் தெளிவாக பதில் அளித்தார்.

அத்தகைய தெளிவு ஹசாரேவிடம் இல்லாததால் தான், சிறந்த சமூகசேவகரான நாணாஜி தேஷ்முக்குடனான அவரது உறவை காங்கிரசால் கொச்சைப்படுத்த முடிகிறது.

ஊழலுக்கு எதிரான போரில் சிறுபான்மையினரைப் பிளவுபடுத்த ஆர்எஸ்எஸ் அஸ்திரம் உதவும் என்று காங்கிரஸ் மனப்பால் குடிக்கிறது. இது சிறுபான்மையினரை மட்டமாக எடைபோடுவதாகும். இதையே ஹசாரே பதிலடியாகத் தர வேண்டும். அதை விடுத்து, திக்விஜய் சிங்கின் புலம்பல்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

இறுதியாக ஒரு விஷயம். ஹசாரேவுடன் தொடர்பு படுத்துவதன் மூலமாக, ஒருவகையில் ஆர்எஸ்எஸ்சுக்கு நற்சான்றிதழையே காங்கிரஸ் வழங்குகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளும்போது, காங்கிரஸ் என்ற வார்த்தைக்கு ஊழல் அடையாளத்துடன் இழிவான பொருள் ஏற்பட்டுவிடக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.