Sunday, April 4, 2010

வசன கவிதை - 53


புத்தாண்டை நோக்கி...10

அவலச்சுமை

இன்னும்
104 நாட்கள் இருக்கிறது*
புத்தாண்டு பிறக்க.

ஒரு நாளுக்கு
24 மணி நேரம்.
ஆக மொத்தம்
2596 மணி நேரம்
கழிந்தாக வேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு
3600 வினாடிகள்.
104 நாட்களுக்கு
நீங்களே
கணக்கு போட்டுக்
கொள்ளுங்கள்.

அதற்குள் இப்படி
அவசரப்பட்டால்
எப்படி?

காலண்டரை
மாற்றிவிடுவதால்
புத்தாண்டு பிறந்து விடுமா?

கிழிந்துபோன
தாள்களில்
கழிந்துபோன
நாள்கள்
இருந்தன.
நாளுக்கு
அவ்வளவு தானா
மரியாதை?

இறந்தகாலத்தை
போகியிட்டு
புத்தாண்டில்
பொங்கலிட முடியாது.

இறந்த காலம் தான்
அனுபவம்.
காலச்சக்கரத்தின்
சரித்திரம்.

அடிமைத் தளையை
அறுப்பதற்காக
ஆருயிர்த் தியாகியர்
ஆகுதியானது
நமது சரித்திரம்.

யினும் அழுத்துகிறது-
அவலச்சுமையாய்
ஆங்கிலப் புத்தாண்டு.

பழைய தாள்களை
பறக்க விட்டதால்
வந்த வினை இது.
பஞ்சாங்கம் போல்
பாதுகாத்திருந்தால்
பரிதாபச்சூழல்
நேர்ந்திருக்காது.

வீட்டுப்பரணில்
தாத்தா காலப் பெட்டியில்
செல்லரித்துக் கிடக்கிறது -
60 வருடப்
பஞ்சாங்கம்.

அதனைக் கொஞ்சம்
தூசு தட்டுங்கள்.
பாதுகாப்பாக
பத்திரப் படுத்துங்கள்.

இன்னும்*
104 நாட்கள் இருக்கிறது
புத்தாண்டு பிறக்க.
அதற்கு இப்போதே
தயாராகுங்கள்!

(நாள்: 17.12.03)
நன்றி: விஜயபாரதம் (26.12.2003)
*குறிப்பு: ஜனவரியில் துவங்கும் ஆங்கிலப் புத்தாண்டைக் கண்டித்து (104 நாட்களுக்கு முன் பிரசுரம் ஆகும் வகையில் எழுதிய கவிதை இது.
.

No comments:

Post a Comment